Sunday, September 12, 2010

நக்சலைட்

நக்சலைட்

'பசித்தவனுக்கு சோறுபோடு'

போதித்தான் ஒருவன்

'பசித்தவனை படைத்தவன் எவன்?

' கேள்விகேட்டான் மற்றொருவன்

இருவரும் தொலைகாட்சியில்

ஒருவன் ஞானியாய்!

மற்றவன் நக்சலைட்டாய்!





"குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்படும்'-

அரசு அறிவிப்பு"- சுவர் விடாமல் எழுதி வந்தான்

கூலிக்கு அமர்த்தப்பட்ட சிறுவன் !



செய்தியாளன்

தொழிலாளர்கள் பிரச்சனைகளை

பக்கம் பக்கமாக எழுதினான்

மூன்று மாத சம்பளபாக்கியோடு!





கூந்தல்

பூக்களை சுமந்தாலும்

கிளைகளை சூடிகொள்வதில்லை

எந்த கூந்தலும்!



மரம்

"தன்னை வெய்யிலில்

நிறுத்திக்கொண்டு

நிழல் தருகிறது- 'மரம்'!"



"விதைத்தால் மட்டுமல்ல

எரித்தாலும் வளர்வோம்

- முள்ளிவாய்க்கால் தமிழன் "



வேலி

பூக்களை காக்க

வேலி

வேலியை காக்க?-



விடியல்

உலகின் விடியல்

கிழக்கில்

தமிழின் விடியல்

'தெற்கில்'-ஈழம்!



உறவு

உறவுகளின் தொடக்கம்

அம்மா

தமிழனின் தொடக்கம்

'தம்பி'!



தனிமை

"தாயுண்டு தாய்மையில்லை

காதலியுண்டு காதலில்லை

நண்பர்களுண்டு நட்பில்லை

- தனிமை கொடிதிலும் கொடிது!"



பயணம்

"எறும்பின் பாதையில்

யானை பெரிது

பருந்தின் பார்வையில்

யானையோ எறும்பு

- என் பயணம் தொடர்கிறது.!!"



எந்திரன் படக்குழு

சதைகளை காட்டி

தமிழன் ரத்தம்உறியும்

அட்டைகள்-

"எந்திரன் படக்குழு"



நான்

பூக்களின் தேசத்தில்

வேர்களுக்கு மதிப்பில்லை!

-வேர்களாய் நான்!



குழந்தைகள் நிகழ்ச்சி

கண்ணீரும் மூலதனம்

புன்னகையும் மூலதனம்

தொலைகாட்சிகளில்

குழந்தைகள் நிகழ்ச்சி...

தமிழக ஆட்சி

‎"மதுரைக்கு கீழே

தென்னாடு மூத்தவருக்கு,

மதுரைக்கு மேலே

வடநாடு இளையவருக்கு..

ஆம்....

மன்னராட்சி ஒழிந்துவிட்டது.

'மக்கள்' ஆட்சி மலர்ந்துவிட்டது...-

"தமிழக ஆட்சி!"

Wednesday, July 28, 2010

வெளிவரட்டும் தமிழனின் உண்மையான வரலாறு!




2010 – மார்ச் மூன்றாவது வாரம்…..

”ஈழத்தில் இனப்படுகொலை தீவிரமாக நடைபெற்ற வேளையில் என்னைப் போன்றவர்கள் தூக்க மாத்திரை போட்டுக்கொண்டுதான் தூங்கினோம். எத்தனை நாளைக்குத்தான் சாவை கேட்டுக் கொண்டே இருப்பது. நாளைக்கு சாகப் போகிறார்கள் மனிதர்கள் என்று தெரிந்தால் எப்படித் தூக்கம் வரும்?

இந்தப் படுகொலையை நேரடியாக ஆதரித்தவர்கள், மறைமுகமாக ஆதரித்தவர்கள் மீதான ஆத்திரம் எனது உயிர் மூச்சு உள்ளவரை நீடித்திருக்கும்.

தூக்கமில்லாமல் கழிந்த இரவுகள் திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகின்றன. அதனாலே செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை. கலைஞர் கூப்பிட்டதினால் சிவத்தம்பி போகலாம். நான் போக மாட்டேன்.”

- பேராசிரியர் ”தொ.ப” என்றழைக்கப்படும் தொ.பரமசிவன் “சண்டே இந்தியன்” இதழுக்கு அளித்த பேட்டி.

24-03-2010 – பாளையங்கோட்டை.

”எங்கள் அன்பிற்குரிய ”தொ.ப” அவர்களே…… உங்களது இந்த உணர்வுதான் எங்களை இங்கு வரவைத்திருக்கிறது. நீங்கள் மட்டுமில்லை நாங்களும் கலந்து கொள்ளப்போவதில்லை. செம்மொழி மாநாட்டின் போது இங்கு வந்து உங்கள் வீட்டுத் தாழ்வாரத்தில் அமர்ந்து தமிழ் கற்றுக்கொள்வோமே ஒழிய….. ஒருபோதும் அங்கிருக்க மாட்டோம்…..” என்று அன்று அவரது மணிவிழாவில் பேசியபடி செம்மொழி மாநாட்டுத் துவக்க விழாவன்று கோவையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தோம் நாங்கள். இது ஒரு நூதன நாடுகடத்தல். ஆம்….. வேறு வகையில் சொல்வதானால் தன்னைத் தானே நாடு கடத்திக் கொள்வது.(Self Deportatation). எங்கள் வாகனம் கோவையை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கையில் “உடன்பிறப்புகளது” எண்ணற்ற வாகனங்கள் செம்மொழியைச் “செழுமைப்படுத்த” ஊருக்குள் நுழைந்து கொண்டிருந்தன.

முதல் பொழுது…… செயல்படாத தமிழ்ச்சங்கம் இருக்கும் மதுரையில் கழிய மறுநாள் பயணமானோம் தோழன் தொ.ப.வின் திசை நோக்கி திருநெல்வேலிக்கு. வழக்கமாக இலக்கிய சங்கமம் நிகழும் தெற்கு பஜார் சாலையின் தேநீர்க்கடையில் நண்பர்களோடு தேநீர் சாப்பிடலாம் என காலை வைத்தால்……

“என்னது…. மேடையில் சொன்னமாதிரியே வந்துட்டீக…..?” என ஆச்சர்யம் அகலாமல் கேட்டார் சாலையில் புத்தகக்கடை வைத்திருக்கும் தோழர்.

மேடையில் ஒன்று…… மேடையை விட்டிறங்கினால் மற்றொன்று…… என பார்த்துப் பார்த்துச் சலித்த பூமியாயிற்றே இது. பாவம் அவர் என்ன செய்வார் அதற்கு?

வீட்டினுள் நுழையும்போது.தமிழிசையில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் மம்முது அவர்களின் “தமிழிசைப் பேரகராதி” என்கிற நூலை வாசித்துக் கொண்டிருந்தார் தொ.பரமசிவன்.

எங்கள் பேச்சு எது பல்லவி? எது அனுபல்லவி? அனுராகம் என்பது எது? என்கிற திசையில் நகரத் தொடங்கியது.

உடன் வந்த நண்பர் “அனு” என்றால் என்ன? என்று கேட்க….. ”அனு” என்றால் ”தொட்டடுத்து வருவது” என்றார் தொ.ப. நமக்குத் தெரிந்ததெல்லாம்….. அனுபல்லவி தியேட்டரும்…… நடிகை அனுராதாவும்தான்.

இந்தித் திணிப்பிற்கெதிராக குரல் கொடுத்த பரவஸ்த ராஜகோபாலாச்சாரியார் யார்?

”அபிதகுஜலாம்பாள்” என்பதற்கான அர்த்தம் என்ன?

திராவிட இனத்துக்காக டி.எம்.நாயர் ஆற்றிய பங்குகள் என்னென்ன?

மருதநாயகம் என்றழைக்கப்படும் கான்சாகிப் குறித்து சிலிர்க்க வைக்கும் அம்சங்கள் எவையெவை?

என எண்ணற்ற விஷயங்கள் வந்து விழ விழ மண்டையே சூடாகிப் போனது.

பேச்சு “ஆதிச்சநல்லூர்” பக்கம் திசை மாற…… அதென்ன ஆதிச்ச நல்லூர்? அங்கென்ன இருக்கிறது? என்றேன். சுற்றியிருந்த நண்பர்கள் கூட்டம் என்னை ஏற இறங்கப் பார்த்தது. நான் தான் அறியாமைக்கென்றே அவதாரம் எடுத்தவனாயிற்றே….. அப்புறம் எப்படிப் புரியும் அதெல்லாம்?

”தொ.ப.” சிரித்துக் கொண்டே…. ”நாளை நாம் நேரிலேயே போய் பார்க்கலாம்… ஆதிச்சநல்லூரைப் பற்றி அங்கு வைத்தே விளக்கிச் சொல்கிறேன்.” என்றார்.

கோவையில் இருந்து சென்ற நண்பர்களோடு திருநெல்வேலி தோழர்களும் இணைந்து கொள்ள அங்கிருந்து இருபத்தி நாலு கிலோமீட்டர் பயணம். சாலையின் ஓரத்தில் தெரியும் ஒரு பொட்டல் காட்டில் வண்டியை நிறுத்தச் சொல்கிறார் ”தொ.ப.”

“இதுதான் ஆதிச்ச நல்லூர்”

இதென்ன சுடுகாடு மாதிரி இருக்கிறது…… இதைப்போய்….. என்று நண்பர்கள் இழுக்க…..

“உண்மைதான். ஆனால் இது இடுகாடு. ஏறத்தாள மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர் இதுதான்” என்கிறார் அந்த பொட்டல் வெளியைக் காட்டி.

ஒன்றும் புரியாமல் முழித்தவர்களைப் பார்த்து “இன்னும் கொஞ்ச தூரம் நடப்போம் வாங்க….” என முன்னே செல்கிறார் தொ.ப.

ஏறக்குறைய இருபது அடி கூட நடந்திருக்க மாட்டோம்…… காலுக்குக் கீழே சிதில் சிதிலாய் ஓடுகள்…… சில கறுப்பில்…. சில சிவப்பில்…..

“இதுதான் அந்த மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களின் மிச்சம்….. அதோ அதன் வாய்ப் பகுதி….. எவ்வளவு நேர்த்தியான வேலைப்பாட்டுடன் உருவாக்கியிருக்கிறார்கள் பாருங்கள்…….” என ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போக வியப்பில் பிரமித்துப் போய் நிற்கிறோம் நாங்கள்.

ஆதிச்சநல்லூரின் ஆதி வரலாற்றைச் சொல்லத் தொடங்குகிறார் தொ.ப.

”ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான். 1876 ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.” என்று நீண்ட பெருமூச்சோடு நிறுத்தியவர் அந்தப் பகுதியையே சுற்றும் முற்றும் கவனிக்கத் துவங்குகிறார்.

உடன் வந்த மற்றொரு நண்பர் அவர் விட்ட இடத்திலிருந்து பேசத் தொடங்குகிறார்.

“அதன் பின்பு வந்தவர்தான் இந்திய தொல்லியல் துறையைச் சார்ந்த ரியா. இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார்” என முடிக்க…..

இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என எல்லோரும் கும்பலாய் குரல் கொடுக்க……

“அவர்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான்.” என தொடர்கிறார் தொ.ப.

”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால்….. அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள்…. அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள்…. அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும்.”

அந்தக்கணம்தான் உறைக்கிறது எனக்கு. “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி” என்பதெல்லாம் நமது ஆட்கள் கொஞ்சம் ஓவராகப் பீலா காட்டிய விஷயமோ என்றிருந்த எனக்கு அவர் பேசப் பேச கிலி கிளப்புகிறது.

அந்த ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.

ஏனிந்த நிலைமை என்றோம் ஏக்கத்தோடு.

”எல்லாம் அரசியல்தான்” என்றார் பேராசிரியர்.”தொ.ப.” வருத்தத்தோடு.

“இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்சனை. இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலைத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஒரு உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.” என்று தொ.ப.கூறி முடித்தபோது எங்களது கனத்த மெளனங்களையும் தாண்டி காற்றுமட்டும் பலத்த சலசலப்போடு எதையோ சொல்லிக் கொண்டிருந்தது.

சரி….இங்கு எடுத்துச் சென்ற பொருட்களையெல்லாம் இங்கேயே கொண்டு வந்து சேர்த்து ஒரு அருங்காட்சியகமாவது வைக்கலாமே… என்றேன்.

”அருங்காட்சியகமும் வரட்டும். ஆனால் அதற்கு முன்னதாக பூமிக்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கிற தமிழனின் வரலாறு வெளியே வரட்டும். அதுவும் உலக வரலாறுகளையே புரட்டிப்போட இருக்கிற உண்மையான வரலாறு.”என்றார் அழுத்தம்திருத்தமாக.

யார் இதைச் செய்ய வேண்டியது?

”மத்திய அரசு.”

அதைச் செய்யவைப்பது?

”மாநில அரசு.”

துன்பம் வரும் வேளையிலும் சிரிக்கத்தானே சொல்லியிருக்கிறார் வள்ளுவர்?.

சிரிக்கத் தொடங்கினோம் நாங்கள்.

எல்லாம் முடிந்து வண்டியில் ஏறும் போது மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன் பொட்டல் காட்டை.

இப்போது அது பொட்டல் காடாய்த் தெரியவில்லை எனக்கு.

July 14, 2010 நன்றி: தோழர் பாமரன்

www.pamaran.wordpress.com

Wednesday, July 21, 2010

லஞ்சம் வாங்காமல் வாழ்ந்து பார்-லஞ்சம் வாங்காத கலெக்டர்.19.11.09




"தடக், தடக், தடக், தடக்' -பெரும் சத்தத்துடனும் கரும் புகையை வெளியிட்டபடியேயும் கோக், பெப்சி உற்பத்தி ஆலை இயங்கிக் கொண்டிருக்க "சர்ர்ரென... காற்றை கிழித்தபடி அங்கு வந்து நிற்கிறது அரசு ஜீப். பருத்தி ஆடையில் ரப்பர் செருப்பில் அதிகாரி ஒருவர் இறங்க அவரை கண்டு மிரண்ட நிர்வாகத்தினர் உள்ளூர் கவுன்சிலரிலிருந்து வெளிநாட்டு அதிகாரிகளின் பெயர்கள் வரை சொல்லி பார்க்க எதையும் சட்டை செய்யாமல் கேட்டை இழுத்து மூடி ஆலைக்கு சீல் வைத்து, மாவட்டத்தில் சாதாரண பெட்டிக்கடை உட்பட எங்கும் கோக், பெப்சி விற்கக் கூடாதென தடை விதிக்கிறார். உலகத்திலேயே முதன்முறையாக ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு சீல் வைத்து காஞ்சி புரத்தையே கலங்கடித்த அன்றைய டி.ஆர்.ஓ. அதிரடி சகாயம் தான் இன்றைக்கு நாமக்கல் கலெக்டர் "சக்சஸ்' சகாயமாகி இந்தியாவிலேயே முதல் கலெக்டராக தன் சொத்து கணக்கை வெளியிட்டு தேசத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.


"மதுரையில் சொந்தமாக 9 லட்சத்தில் ஒரு வீடு, 7,172/- ரூபாய் வங்கி இருப்பு' இதுதான் சகாயத்தின் சொத்து. 4000 கோடி ரூபாய் பதுக்கி வைத்த மதுகோடாக்கள் தேசத்தில் இப்படியும் ஒரு அதிகாரியா? ஆச்சர்யத்தோடு "சக்சஸ்' சகாயத்தை பேட்டியெடுக்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு சென்றோம். "பேட்டியா? ப்ளீஸ் அதெல்லாம் வேண் டாமே?' என மறுத்தவரை எப்படியோ பேசி ஒப்பக்கொள்ளவைத்து "வாழ்த் துக்கள்' சொல்லி "உங்கள் சொத்து விவரங்களை சொல்லுங்கள்' என் றோம். "மதுரையில் என் மனைவிக்கு அவங்க அப்பா 9 லட்சத்தில் வாங்கித் தந்த ஒரு வீடு உள்ளது. அதற்கு எல்.அய்.சி. லோன் ஏழரை லட்சம் இருக்கு. மாத தவணையாக ரூ.8,500/- கட்டி வருகிறோம். அதில்லாமல் வங்கியில ரூ.7,172/- இருப்பு இருக்கு.

பொது வாழ்வில் இருப்போர் தங்களது சொத்து விபரங்களை வெளியிடவேண்டும் என்ற கருத்து வலுவான பின்தான் நீங்கள் வெளியிட துணிந் தீர்களா?

சகாயம்: இல்லை. அப்படியில் லை. வருடம் ஒருமுறை அசையா சொத்துக்களை ஒவ்வொரு கலெக்டரும் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டு மென்பது அரசு விதி. கடந்த மாதம் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. அக்கூட்டத்திலேயே இதை வெளியிட்டேன். அத் தோடு சேர்த்து என் வங்கி இருப்பையும் வெளி யிட்டு அதை அப்பொழுதே எங்கள் மாவட்ட நிர்வா கம் பற்றிய இணையதளத்தில் வெளியிட்டுவிட்டேன்.

இதை வெளியிடும் நோக்கமென்ன?

சகாயம்: மக்கள்தான் நம் எஜமானர்கள். மக்களின் நம்பிக்கையை நாம் பெற்றாக வேண்டும். அதற்கு நாம் மக்கள்முன் வெளிப்படையாக இருக்க வேண்டும். அதிகாரிகள், அரசு அலுவலர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையென்று ஒன்று கிடையாது. அவர்கள் மக்களில் ஒருவரே. மக்களுக்கான அவர் பணியில் மக்கள் முன் ஒளிவு மறைவில்லாமல் இருக்க வேண்டி என் கணக்கை வெளியிட்டேன்.

ஆனால் கடனில் ஒரு வீடு, 7,172 ரூபாய் பேங்க் பேலன்ஸ் என்பது நம்ப முடியவில்லையே?

சகாயம்: "ஹா ஹா ஹா' (சிரிக்கிறார்) பின், தொடர்ந்து... இவையில்லாமல் வேற சொத்துக்கள் என் பெயரிலோ, குடும்பத்தின் பெயரிலோ இருப்பதாக யாராவது கண்டுபிடித்தால் அதை அவர்களே எடுத்துக் கொள்ளட்டும்.

நேர்மையாக இருந்தால் சராசரியாக தான் இருக்க முடியுமா?

சகாயம்: ஆம் அதிலென்ன சந்தேகம். ஆடம்பரமாக இருக்க முடியாது. ஆனால் அழகான வாழ்க்கையாக இருக்கும். ஆசைக்கான வருமா னத்தை அமைத்துக் கொள்வதை விட தேவைக் கான வருமானம், அந்த வருமானத்திற்குள்ளேயே வாழ்க்கையை அமைத்து கொள்வது நமக்கு மனநிம்மதியை தரும். என் 20 வருட அனுபவம் இதுவே. இதுவே யதார்த்தனமானது.

நேர்மையாக இருக்க யார் இன்ஸ்பிரேசன்?

சகாயம்: என் அம்மாவும் என் துணைவி யும்தான். விவசாயம் செய்யும்போது வரப்புக்கு அருகே ஒரு அங்குல புறம்போக்கு இடமிருந்தா கூட அதை பயன்படுத்த மாட்டாங்க எங்கம்மா. "எது நமக்கு உரியதோ அதை மட்டுமே நாம் அனுபவிக்க வேண்டும்' எங்கம்மா சொல்லிக் கொடுத்தது. அப்புறம் என் துணைவி. 2003-ல என் குழந்தை யாழினிக்கு பயங்கர வீசிங் பிரச்சனை. மருத்துவமனையில சேர்க்கிறோம். அப்ப நான் கோவை கலால் துறையில டெபுடி கமிஷனரா இருக் கேன். யாழினி சீரியசா இருக் காள். நாலாயிரம் ரூபாய் கட்டணும். மாத கடைசிங்கற தால சுத்தமா பணமில்லை. என் துணைவி ஆஸ்பிடல்ல துடிச்சிக்கிட்டு இருக்காள். அக்கம்பக்கத்தில் உள்ளவங்களோ "உங்க வீட்டுக்காரர்தானே கலால் துறையில இருக்காரு. சிக்னல் காண்பிச்சாலே பிராந்தி கடைக்காரங்க லட்சம் ரூபாயினாலும் வந்து கொட்டிடுவாங்களே'னு சொன்னாங்க. ஆனா என் துணைவியோ "லஞ்சப் பணத்தில் என் குழந்தை உயிரோடு வாழ்றதை விட இங்கே சாவுறது பெரிய சுமையில்லை'னு சொன்னாங்க. என் கொள்கைக்கேற்ப துணைவி கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. அப்புறம் ஆசிரியர் நண்பர் ஒருவரிடம் கடன் பெற்று குழந்தையை காப்பாற்றினோம்' எனும்போதே ""ஆனா சாருக்கு கோபம்தான் ஜாஸ்தி'' என்றபடியே தேநீர் கொடுத்து உபசரித்த கலெக்டர் மனைவி விமலா, ""போனவாரம் மதுரைக்கு குடும்ப விழா ஒன்றுக்கு என்னை போக சொன்னாரு. பஸ் ஏறி ஸ்டேன்டிங்க்ல போறேன். கொஞ்ச நேரத்திலேயே போன் செய்து "இன்னும் அங்கு போய் சேரலையா'னு கோபமா பேசுறாரு. கூட்டம் அதிகம்ங்கிறதால பஸ் மெதுவா போனதுக்கு நான் என்ன செய்வேன்' முகம் சுருக்க "சரிம்மா நம்ம நக்கீரன். முன் னாலேயே சுயவிமர்சனம் செய்து வருத்தம் தெரிவிச்சுக்கிறேன் போதுமாம்மா' வேடிக்கையாக கேட்டவர் தொடர்ந்து ""If you have Power, use it for Poor' அதாவது "உனக்கு அதிகாரம் இருந்தால் அதனை ஏழைகளுக்கு பயன்படுத்து' என்பதுதான் என்னுடைய கொள்கை. அந்தடிப்படையிலேயே நானும் நேர்மை யோடு என் பணியை தொடர்கிறேன்'' என்றார் சிந்திக்கும்படி.

உண்மைதான். ஒருபக்கம் நாள் ஒன்றுக்கு ஒருவேளை உணவு கூட சரியாக கிடைக்காமல் 45 கோடி மக்கள் இருக்கும் வறுமை இந்தியா. மறுபக்கம் 4000 கோடி பதுக்கல் செய்யும் ஊழல்வாதிகளின் வளமை இந்தியா -சகாயம் போல ஒவ்வொரு குடிமகனும் நேர்மையோடு செயல்பட்டால் வறுமை ஒழிந்த "சமத்துவ இந்தியா'வாக தேசம் ஒளிருமே!

-சே.த.இளங்கோவன்

Saturday, July 17, 2010

"கிராமத்தானின் வலி!"

என் நெருங்கிய நண்பனின்,தோழனின் கவிதை. வளர்ந்து வரும் கவிஞர்,எழுத்தாளர்,புகைப்பட கலைஞர் இவை அனைத்தையும் விட சமூகம் "சமத்துவம்" அடைய,தன் தளத்திலிருந்து அயராமல் உழைக்கும் பொதுவுடமைவாதி.
வடிவின் வலி!

தமிழர் இனப்போராட்ட வரலாறு - ஓர் அறிமுகம்

தமிழ்த் தேசிய உணர்வும் தமிழ்த் தேச விடுதலை எண்ணமும் மேலோங்கி வரும் இவ்வேளையில், தமிழரின் போராட்ட வரலாறு முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த காலப் போராட்ட அனுபவங்களில் இருந்துதான் எந்த இனமும் தமது எதிர்காலத்தைத் திட்டமிட இயலும். அவ்வகையில், தமிழர்கள் கடந்த ஒரு நூற்றாண்டாகவே போராடி வந்தாலும், அப் போராட்டங்கள் அனைத்தும் தவறான வழி நடத்தல்களால் / பிழையான கோட்பாடுகளால் மழுங்கடிக்கப்பட்டுவிட்டன.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘தமிழ் - தமிழர் - தமிழ்நாடு’ என்ற சிந்தனை மேலோங்கியது. இந்தச் சிந்தனை எழுச்சியை வெகு தந்திரமாக மடை மாற்றியது திராவிட இயக்கம். ‘திராவிடம் - திராவிடர் - திராவிட நாடு’ எனும் புத்தம் புதிய முழக்கங்களை அது முன் வைத்தது. இம் முழக்கம், ஏறத்தாழ ஐந்தாயிரம் ஆண்டு கால தமிழ் இன வரலாற்றில் ஒரு போதும் நிலவாதது ஆகும். மேலும், திராவிடர் எனும் சொல்லால் தமிழர்கள் தம்மை, அதற்குமுன் ஒருபோதும் அழைத்துக் கொண்டதும் இல்லை.

இன்றும், தமிழர் என்ற அடையாளத்தை மறைக்க திராவிட முகமூடியைச் சுமந்து வருவோர் இருப்பதைக் கவனித்தால், தமிழ் - தமிழர் - தமிழ்நாடு ஆகிய முழக்கங்களின் இன்றியமையாமை விளங்கும்.

தனித் தமிழ் நாடு வேண்டும் என்ற விருப்பம் தமிழர்களின் ஆழ் மனத்தில் எப்போதும் உண்டு. ஏனெனில், வரலாற்றில் பெரும்பான்மையான காலப் பகுதிகளில் தமிழர்கள் தமக்கான அரசுகளை அமைத்து ஆண்டவர்கள். அந்த நினைவு தமிழ்ச் சமூகத்தின் மா உளவியலில் (mass psychology) அழுந்தப் பதிந்துள்ளது. ஆரிய பார்ப்பனர்களின் ஆழ்மனம் எப்போதும் ஒரு நிலத்தில் கால் ஊன்றால், சுரண்டுவதற்கான இடம் தேடி அலையும் என்பது அவ்வினத்தின் மா உளவியலே.

தமிழர்களின் தனிநாட்டு வேட்கை, காலந் தோறும் வெடித்துக் கொண்டுதான் இருந்துள்ளது. தமிழர் போராட்ட வரலாற்றைச் சுருக்கமாக இக் கட்டுரையில் காண்போம்.

சிந்து வெளித் தமிழர்

இந்திய நிலப்பரப்பின் வட மேற்கில் தொடங்கிய சிந்துவெளி அரசு, தெற்காசியாவின் வட மேற்குத் திசை வழியே ஏறத்தாழ 10 லட்சம் சதுர கிலோமீட்டர் பரவி இருந்தது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே (கிமு.2600 - கிமு 1900), மிக உயர்ந்த நாகரிகத்தை எட்டியிருந்தது சிந்து வெளித் தமிழர் அரசு. சிந்து நதியின் பெரு வெள்ளத்தையே தடுத்து, பாசனம் செய்ய அணைகள் கட்டி இருந்தனர் சிந்துவெளித் தமிழர்கள். அடுக்கு மாடி வீடுகள், நகரின் மையத்தில் நீச்சல் குளம், மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வீதிகள், தொழிலாளர்களுக்கென தனி வீடுகள், பாதாளச் சாக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் சிந்துவெளியில் இருந்தன. உலகின் மிகப் பெரிய பண்டைய நாகரிகம் இது ஆகும்.

கப்பற் கலையில் சிந்து வெளித் தமிழர் விற்பன்னர் களாக இருந்தனர். சிந்து ஆற்றின் வழியே கலங்களில் பொருட்களை ஏற்றிக்கொண்டு அரபிக் கடலுக்கு வந்து, அங்கிருந்து கப்பல்களில் பொருட்களை ஏற்றிச் சென்றனர். இறக்குமதிக்கும் இவ்வழியே பயன்படுத்தப்பட்டது.

சிந்துவெளி அரசு தமிழர்களுடையதுதான் என்பது ஐயந் திரிபற நிறுவப்பட்டுவிட்டது. ஆனால், ஆய்வாளர்கள் அனைவரும் சிந்துவெளி மக்களை, ’மூல திராவிடர்’ என்கின்றனர். தமிழர் என்று அறுதியிட்டுக் கூறவியலா வண்ணம் ’திராவிட அரசியல்’ தமிழகத்தில் தாக்கம் செலுத்தி யுள்ளது. சிந்துவெளி மக்கள் பேசிய மொழி தமிழ் மொழியே என்பதற்கான சான்றுகளும் கிடைத்து விட்டன. அக்காலத்தில் இருந்த தமிழுக்கும் இக்காலத் தமிழுக்கும் வேறுபாடுகள் உண்டு. ஆதலின், சிந்துவெளி மொழியை மூலத் தமிழ் மொழி என அழைத்தலே பொருத்த மானது. ஆனால், திராவிடம் குறித்த பெரு எடுப்பிலான பரப்புரையின் விளைவு, ஆய்வுலகையும் தாக்கி யுள்ளதால், சிந்துவெளி மொழியை ‘மூல திராவிட மொழி’ என்று ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.

சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் உள்ள எழுத்துகளை, ஒலி வடிவத்துடன் மீட்டுருவாக்கம் செய்துள்ளனர் அறிஞர் பலர். முனைவர்.இரா. மதிவாணன் தமது ஆய்வில் வெளியிட்டுள்ள சிந்து வெளி எழுத்துகள் சிலவற்றைக் காண்போம்:

அவ்வன்
அண்ணன் அப்பு
அட்டன்
அதியன்
சானன் அவ்வன்
நன்னன்
அந்தனன்
(Indus script Dravidian - Dr.r.Madhivanan / Tamil chanror peravai/ 1995)

ஆகவே, சிந்துவெளி அரசு தமிழர் அரசு என்பதில் யாதொரு ஐயமும் தேவை இல்லை.

சிந்துவெளித் தமிழர் அரசு நிலைகுலையத் தொடங்கியது ஆரியப் படையெடுப்பினால்தான்.

தமிழர்கள் மாபெரும் நாகரி கத்தைக் கட்டியாண்ட காலத்தில், கொள்ளையர்களாகவும் கால்நடை மேய்ப்பவர் களாகவும் வட மேற்கு இந்தியா விற்குள் புகுந்தவர்கள் ஆரியர்கள். தமக்கென ஒரு நிலையான நாடு இல்லாமல், நிலைத்த அரசு இல்லாமல் வழிப்பறி செய்தும் சூறையாடியும் வாழ்க்கை நடத்தியவர்கள் ஆரியர்கள். கால் நடை மேய்த்தல் ஒன்றுதான் அவர்கள் அறிந்த உற்பத்தி சார்ந்த தொழில். பல்வேறு நாகரிகப் பழங்குடிகளின் குடியிருப்புகளைச் சூறையாடி அவர்களது பண்பாட்டு மதிப்பீடுகளையும் உற்பத்தி நுட்பங்களையும் தமதாக்கிக் கொண்டுதான் ஆரிய இனம் சிந்துவெளிக்குள் நுழைந்தது.

தமிழரது சிந்துவெளி அரசின் கட்டமைப்பும் வளமையும் ஆரியருக்கு திகைப்பை ஏற்படுத்தி யிருக்க வேண்டும். சிந்துவெளியின் மீது ஆரியர் போர் தொடுத்தனர். ஆரியரது போர் முறையின் அடிப்படை ஒன்றுதான் - அழித்தொழி! எஞ்சியதைக் கைப்பற்று!

இந்த அடிப்படையில் தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழர்கள் இவ்விதமான போரை அதற்குமுன் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. தமிழர்களுக்கு, தற்காப்பு நிலை தேவைப்பட்டது. ஏனெனில், ஒரு மாபெரும் நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் அவர்கள். நகரங்கள், கப்பல்கள், எண்ணற்ற உற்பத்தி ஆலைகள், வேளாண் நிலங்கள், அணைகள் என அவர்கள் கட்டமைத்திருந்த செல் வங்கள் ஏராளம். பொதுமக்கள் அனைவரும் போர் வீரர்களும் அல்லர். அவர்கள் அமைதியான வாழ்வியலைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தனர்.

ஆரியர்களுக்கோ அழித் தொழிப்பதும், எஞ்சிய வற்றைப் பிடுங்குவதுமே வாழ்வியல். வெறி பிடித்த கொள்ளைக் கூட்டத்திற்கும் நாகரிகமயப்பட்ட மாந்தருக்கும் இடையே நடந்த போர் அது. இப்போர் பல நூற்றாண்டுகள் நீடித்தது. ஆரியரது முதல் வேதமான, ரிக் இப்போர் குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளது. ரிக் வேதம் வாய் வழியாகப் பாடப்பட்டு வந்தது. ஆரிய முனிவர்கள் தமது வரலாற் றைப் பாடல்களாக்கி வழி வழியாகப் பாடியே, அடுத்தடுத்த தலைமுறை யினருக்கு ஆரிய வெறி ஊட்டினர். ஆரியருக்கு அப்போது எந்த எழுத்து மொழியும் இல்லை.

ரிக் வேதம், சிந்துவெளித் தமிழரை ‘தஸ்யூக்கள்’ என்கிறது. தாசர்கள் என்பது இதன் தமிழ் ஒலிப்பு முறை. தாசர்கள் என்றால், ’வள்ளல் என்பதே மூலப் பொருள். ஆனால், அது இப்போது அடிமை என்று மாறி விட்டது. ஆரியன் என்றால் நாடோடியாகத் திரிகிறவன் என்று பொருள். அது இபோது உயர்ந்தவன் என மாறிவிட்டது’ என்பார் அறிஞர் கோசாம்பி.(நூல்: பகவான் புத்தர்)

பெரும் செல்வச் செழிப்புடனும் வளமையுடனும் வாழ்ந்த சிந்துத் தமிழர், ஆரியருக்கும் பிறருக்கும் வாரி வழங்கிய வள்ளன்மையுடன் வாழ்ந்ததன் அடையாளம் ‘தாசர்’ என்ற பெயர்.

சிந்துவெளித் தமிழரது தலைவர், விருத்திரன் என்று அறியப்படுகிறார். இந்திரன், ஆரியரின் தலைவன். இந்திரன், குடி வெறியன், பெண்பித்தன். தமிழர்களது நீர்த் தேக்கங்களைப் பாதுகாக்கும் தலைவராக, அகி என்பவர் அறியப் படுகிறார். இந்திரனது படைகள், சிந்துவெளியின் நீர்த் தேக்கங்களையே கூடுதலாகக் குறி வைத்துத் தாக்கின. இதற்கு ஆரியர்கள் கூறிய காரணம் கவனிக்கத்தக்கது.

’மாட்டு மந்தைகளை அடைத்து வைத்திருப்பதுபோல், இந்தத் தாசர்கள் தண்ணீரைப் பிடித்து அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்திரனே! இதைக் கட்டுத் தறியிலிருந்து மாட்டை அவிழ்த்து விடுவதுபோல், சிறைப்பிடித்து வைத்திருக்கின்ற இந்தத் தண்ணீரை அவிழ்த்துவிடு இந்திரா’

-இவ்வாறு ஆரிய முனிவர்கள்/ தலைவர்கள் கூறக் காரணம் என்னவாக இருக்கும்?

ஒரு பேரழிவை ஏற்படுத்தும் முன், அதை நியாயப்படுத்தும் விதமான பொதுக்கருத்து உருவாக்கப்பட வேண்டும் என்பது இதன் பின்னணியாக இருக்கலாம். ஆரியரது உடன் பிறந்த இயல்பும் இதுவாகும்.

சிந்துவெளித் தமிழரை அழிப்பதற்கு ஆரியர் கூறிய பல்வேறு காரணங்களில் சில,
• தாசர்கள் வேள்வி செய்யாதவர்கள். அதுமட்டுமன்று, ஆரியரது வேள்வி களைத் தடுக்கிறார்கள். இரவிலே வந்து வேள்விகளை அழித்துச் செல்கின்றனர். ஆகவே, இவர்களை அழிக்க வேண்டும்.
• தாசர்கள் கடவுள்களை நம்பாதவர்கள்.
• தாசர்கள் அசுரர்கள்.
• தாசர்கள் மதச் சடங்கு அற்ற வர்கள். அறிவு இல்லாதவர்கள். மனிதத்தன்மையே இல்லாதவர்கள்
-இவ்வாறெல்லாம் சிந்துத் தமிழர்கள் மீது ஆரியர்கள் வெறுப்பு ஏற்படுத்தினர்.

ஒரு சமூகத்தை அழிக்கும் முன், அச்சமூகம் குறித்த பொய்யான அபாயகரமான மதிப்பீடுகளை உருவாக்குவது ஆரியம் இன்றும் செய்யும் திட்டமிட்ட பணியாகும்.

ஈழத்தில் பேரழிவு ஏற்படுத்தும் முன், ’தீவிரவாதம், சகோதர யுத்தம், ரத்த வெறி’ என்றெல்லாம் பல ஆண்டுகளாக ஆரியம் பரப்புரை செய்தது. பின்னர், அழித்தொழிப்பு நடவடிக்கையில் இறங்கியது. ஒரு ஞாயமான போராட்டத்தை அழிப்பதற்குத் தேவையான உள உறுதியையும் துணிவையும் அகத்திலும் புறத்திலும் வழங்கும் அடிப்படைக் காரணி இந்த பொய்ப் பரப்புரை ஆகும்.

நீர்த்தேக்கங்களின் தலைவர் அகி, இந்திரன் படைகளால் கொல்லப்பட்டார். பல நீர்த் தேக்கங்களை ஆரிய வெறிப் படை உடைத்தது. வெள்ளத்தில் மூழ்கி பல்லாயிரம் சிந்துத் தமிழர் அழிந்தனர். விருத்திரன் காட்டில் தன் தாயுடன் ஒளிந்திருந்து சிறிய சண்டைகள் நடத்தினார். பின்னர் விருத்திரனும் தாயும் கொல்லப் பட்டனர்.

சிந்துவெளித் தமிழர்தான் ஆரியரை முதன் முதலில் எதிர்த்துப் பெரும்போர் புரிந்தோர் ஆவர். ஆரியரை எதிர்க்கும் மனத் துணிவும் மரபு வழி அறிவும் இந்திய நிலப் பரப்பில் எவரைக் காட்டிலும் தமிழருக்கே மிகுதியாக உண்டு. சிந்துவெளிப் போர் பல நூற்றாண்டுகளாக நீடித்தது. ஆரியர் வெற்றிகொள்ளத் தொடங்கினர். தமிழர் பகுதிகள் ஆரியக் குடி யேற்றங்களாகின. பின்னர் இயற்கைச் சீற்றங்களால், சிந்து வெளித் தமிழர் நிலம் அழிந்தது.

சங்ககாலத்தில் ஆரியர் - தமிழர் போர்கள்

சங்க காலத்தில் ஆரிய - தமிழர் போர் மீண்டும் தொடங் கியது. தமிழரது ஆட்சியெல்லை, தெற்கே குமரி முதல் வடக்கே விந்திய மலை வரை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. விந்திய மலைக்கு வடக்கே, ஆரியர் ஆட்சியும், தெற்கே தமிழர் ஆட்சியும் நிலவியது.

இக்காலத்தில், தமிழர்கள் அரசுகள் அமைத்து, போர்க் கலைகள் கற்று வலுவுடன் இருந்தனர். முற்கால மூவேந்தர்கள் ஆட்சி செலுத்தினர். இக்காலத்தில், ஆரியர் தமிழரைத் தேடி வந்து படை யெடுத்ததாக எந்தச் சான்றும் இல்லை. மாறாக, தமிழ் வேந்தர்கள் இமயம் வரை சென்று ஆரியரை அழித்ததற்கான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆரிய அரசுகள் தமிழர் அரசுகளுக்கு அடங்கி வாழ்ந்தன என்பதையே வரலாறு உணர்த்து கிறது.

ஆரிய பார்ப்பனர்கள், தமிழகத்தை நோக்கிப் பிழைப்புத் தேடி வந்தனர். அவர்களது ஆட்சி யமைப்புக் கலை, தமிழக வேந்தர் களுக்குப் பயன்பட்டது. அரச உருவாக்கம் என்பது, சமூகத்தில் பல்வேறு பிரிவினைகளை, பாகு பாடுகளை ஏற்படுத்திய மாற்றம் ஆகும். இப்பிரிவினைகளையும் பாகுபாடுகளையும் ஞாயப்படுத்தும் கோட்பாடு எதுவும் தமிழரிடத்தில் இல்லை. அவ்விதமான கோட்பாடு, இன்றுவரை தமிழரிடம் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். ஆரியரோ, ரிக் வேத காலத்திலிருந்தே பாகுபாடுகளை/சுரண்டலைக் கடவுளின் பெயரால் நியாயப்படுத்தியவர்கள். அவர்களது அர்த்தசாத்திரம், ஆட்சியமைப்புக் கலையின் உச்ச கட்ட சீரழிவுகளை போதிக்கும் நூல் ஆகும்.

வேந்தர்கள் பேரரசு உருவாக்கத்தில் ஈடுபட்ட காலத்தில், தமிழக அந்தணர்கள் (பார்ப்பனர்கள் அல்ல - அறிவாளர்கள்!) தமிழ்ச் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் அறக்கோட்பாடு களை வலியுறுத்தினர். வீரம், தமிழ் அந்தணர்களால் போற்றப்பட்டது. அதேவேளை, அறம் சார்ந்த வாழ்வியலே அடிப்படையானதாகக் கற்பிக்கப்பட்டது. புறநானூறு,தமிழ் அரசர்களின் வீரத்தைப் போற்றும் இலக்கியம் எனக் கருதப்படுகிறது. உண்மையில், தமிழ் அரசர்களுக்கு அறம் போதிக்கும் பாடல்கள் புறநானூற்றில் ஏராளமாக இருக்கின்றன. இவ்வகையான அறம் போதிக்கும் மரபு, தமிழருக்கே உரிய சிறப்பு.

தமிழத்தின் எல்லை, ‘ வட வேங்கடம் - தென் குமரி’ என வரையறுக்கபட்டது. ஆனால், தமிழ் வேந்தர்கள் பல்வேறு படை யெடுப்புகளை இமயம் வரை நடத்தி வெற்றி கண்டனர். பேரரசு உருவாக்கத்தில், ஓர் அரசர் எந்த எல்லை வரை படையெடுத்துச் சென்று வெல்கிறாரோ அந்த எல்லையே அவரது பேரரசின் எல்லை ஆகும். ஆனால், தமிழர்கள், இவ்விதமாகத் தமது எல்லையை விரிவுபடுத்தவே இல்லை என்பது மிகுந்த கவனத்திற்குரிய சேதியாகும்.

படையெடுத்து வெற்றி கொள்வது வேறு, இனத்தின் ஆட்சி எல்லை வேறு என்ற ஆழமான புரிதல் அக்காலத் தமிழ் வேந் தருக்கும் அவர்களுக்கு அறிவுரை வழங்கிய தமிழ் அந்தணர்களுக்கும் இருந்தமையை இது உணர்த்துகிறது. தமிழரின் வெளிநாட்டு வணிகத் திற்கான போக்குவரவுகளை ஆரியர் சீர்குலைத்தமையும், மரபுவழிப் பட்ட தமிழரின் பண்பாட்டு நடவடிக்கைகளை, வட இந்தியாவில் ஆரியர் தடுத்தமையும் ஆரியருக்கும் தமிழருக்குமான போர்களுக்கான காரணங்களாக, இருந்திருக்கலாம்.

வாள் வலிமையால் போர் வெற்றி கண்ட தமிழர்கள், தம் இனத்தின் எல்லையை விரிவாக் காததன் விளைவாக, ஆரியம் பண்பாட்டுப் படையெடுப்பு நடத்தி, தமிழகத்தைக் குறுக்கியது. ஆரியக் கலப்பால், வட தமிழகம் ஆந்திர மானது தென் தமிழகம் கேரளமானது மேற்கே கன்னடம் உருவானது.

பல்லவர் - களப்பிரர் ஆட்சியில் ஆரியம் வளர்ந்தது

சங்ககாலத்தின் முடிவில், தமிழகத்தை வென்ற களப்பிரரும் பல்லவரும் கன்னட, ஆந்திர பகுதிகளில் இருந்து படையெடுத்தோரே ஆவர். கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை இவ்விரு அரச குலத்தவருமே ஆண்டனர். களப்பிரர் நாளடைவில் வலிமை குன்றி சிற்றரசர்களாக மாறி ஒழிந்தனர். பல்லவர்கள் பேரரசர் களாக நீடித்து வலிமை குறைந்து சோழர் எழுச்சியால் வீழ்ந்தனர். இதன் பிறகுதான், பிற்காலச் சோழர், பாண்டியர் அரசுகள் வழியே மீண்டும் தமிழர் ஆட்சி தமிழகத்தில் தோன்றியது.

கி.பி. 2 முதல் கி.பி. 9 வரையிலான 700 ஆண்டு காலம், தமிழினம் ஆரியப் புதல்வர்கள் ஆட்சியின் கீழ் வாடியது. தமிழர் தவிர்த்த, தென்னிந்திய இனங்கள் ஆரியத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவையே ஆகும். பல்லவரது ஆட்சியில் வடமொழியே ஆட்சி மொழி. களப்பிரர் ஆட்சிப் பகுதி களிலும் வட மொழியின் ஆதிக்கமே மிகுந்தது. இவ்விரு அரசுகளும் தமிழ் இனத்தின் மீது பகைமை கொண்டவை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். தமிழர்கள், பேரரசுகள் கட்டி ஆண்ட காலத்தில், தமிழ் இனத்தின் வாழ்வெல்லையைக் கடந்து தமது அரசை விரிவாக்க வில்லை. பிற தேசங்களில் தமிழை ஆட்சி மொழி ஆக்கவில்லை. ஆனால், தமிழரை வெற்றி கொண்ட அயலார் அனைவரும், தமிழ் மொழியைச் சீர்குலைப்பதில் தனி கவனம் செலுத்தினர்.

தமிழகத்தில் பார்ப்பனர் குடியேற்றம்

பார்ப்பனர் குடியேற்றங்கள் முதன் முதலாகப் பெருமளவில் நடந்தது பல்லவர் காலத்தில்தான். முதலில், தமிழகச் சிற்றூர்களில் பிற தமிழ்க் குலத்தவருடன் பார்ப்பனரும் கலந்து வாழும்படியான குடியேற்றங்களே செய்யப்பட்டன. அதாவது, பார்ப்பனர்களுக்கெனத் தனிக் குடியிருப்புகள் - சிறப்புத் தன்மைகளுடன், தொடக்கத்தில் ஏற்படுத்தப்படவில்லை. இதற்கான காரணம் என்னவென ஆய்ந்தால், தமிழரின் மரபுப் பெருமை விளங்கும். சங்ககாலம் வரை, ஆரிய பார்ப்பனர்களுக்குத் தமிழரிடையே நன்மதிப்பு இல்லை. அவர்கள் இரண்டாம் தரமாகவே நடத்தப் பட்டனர். கலித்தொகையில் வரும் தலைவி, ’நம் ஊரைவிட்டுத் துரத்தினாலும் போகாமல் சுற்றி வரும் பார்ப்பான்’ என்று ஒரு முதிய பார்ப்பனனைக் கேலி செய்யும் பாடலை இதற்கான மிகச் சிறந்த சான்றாகக் கொள்ளலாம். (குறிஞ்சிக்கலி - 29)

வைகை ஆற்றின் கரையில் பார்ப்பனர்கள் வேள்வித் தீ வளர்க்கும்போது, ஆற்றில் குளித்து விளையாடிய இளம் பெண்கள் வேள்வித் தீயில் தங்கள் ஆடைகளை உலர்த்தியதாக, பரிபாடல் காட்சிப்படுத்தியுள்ளது. (பரிபாடல் -11 / ‘விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப் புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப’ எனும் பாடல்)

மேற்கண்ட இரு சான்றுகளிலுமே, பெண்களே பார்ப்பனர்களைக் கேலி செய்கின்றனர். இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகும்.

அரசதிகார மட்டத்தில் மட்டுமே, பார்ப்பனர்களுக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. அதுவும், பொதுமைப்படுத்திக் கூற இயலாத அளவுக்கு மட்டுப்பட்டுதான் இருந்தது. சமூகத்தில், பார்ப்பனர்களுக்கு வரவேற்பு இல்லை. அவர்களைப் பெரும்பகுதித் தமிழர்கள், தம்மைவிடத் தாழ்ந்தவர்களாகவே கருதினர்.

இந்த நிலையை முதன் முதலில் மாற்றியவர்கள் திராவிடர் களான பல்லவர்களே ஆவர். முதலில், பார்ப்பனர்களைத் தமிழர் வாழும் ஊர்களில் சமமாகக் குடியேற்றினர். பிறகு, பிரமதேய ஊர்கள் உருவாக்கப்பட்டன. பல்லவர்கள்தான் முதன் முதலில் பார்ப்பனர்களுக்கு எனத் தனி ஊர்களை உருவாக்கித் தந்தவர்கள் ஆவர்.

இந்த பிரமதேய நிலங்கள், பார்ப்பனர்களுக்கென இலவசமாக, உரிமையாக வழங்கப்பட்டவை. இவற்றிற்கு அவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை. இதேபோல, சமண மதத் தலைவர்களுக்கென, ’பள்ளிச் சந்தம்’ எனப்பட்ட இறையிலி நிலங்களையும் பல்லவர்களே உருவாக்கினர்.

ஆக, ஆரிய மதக் கருத்தியல்களை ஆதரித்து வளர்த்து, அவற்றுக்காக தமிழரது நிலங்களை தானமாகக் கொடுத்தவர்கள் பல்லவர்கள். சோழர்காலத்தில், பார்ப்பனர்களுக்கு, பிரமதேய நிலங்கள் ’உரிமையாக்கப் படவில்லை’ என்பது இந்த இடத்தில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. சோழர்காலத்தில், பிரமதேய நிலங்கள், அரசனின், வேளாளரின் கட்டுப்பாட்டில்/மேற்பார்வையில் இருந்தன. அந்த நிலங்கள் தற்காலிக அனுபவிக்கும் உரிமையின் அடிப் படையில்தான் வழங்கப் பட்டனவே தவிர, உரிமை ஆக்கப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, சோழர் கால பிரமதேய முறை, பார்ப்பனர்களுக்கு நிலம் வழங்குவது என்ப தல்லாமல், நிலத்தின் வருவாயில் பங்கு தருவது என்பதே ஆகும்.

பிற்காலச் சோழர் அரசமைப் பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பல்லவர் செய்த சீரழிவே பிரமதேய முறை ஆகும். இம்முறையின் தீவினைகளைக் குறைத்தவர்கள்தான் சோழர்கள் என்பதை மேற்கண்ட ஒப்பீடு காட்டும்.

சங்ககாலத்திற்குப் பின் 20 ஆம் நூற்றாண்டுவரை, 1800 ஆண்டு கால வரலாற்றில். களப்பிரர், பல்லவர் - 700 ஆண்டுகளும், விஜயநகர, நாயக்க அரசர்கள் 400 ஆண்டுகளும் தமிழரை ஆண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் திராவிட மரபினர். தமிழர்களது சோழர் காலம் முழு வீச்சுடன் ஆண்டது, 300 ஆண்டுகளுக்கும் குறைவாகவே.

தமிழர் முழுமையாக ஆட்சி செய்த சங்ககாலத்தில், ஆரியத்திற்கு எதிரான அரசியலே இருந்தது. அதன்பின்னர்தான் தமிழகத்தில் ஆரியம் வளர்ந்தது. இந்த அடிப் படையில் அணுகினால், உண்மையில் ஆரியத்தை வளர்த்தெடுத் தவர்கள் தமிழர்களா? திராவிடர்களா? என்பது வெளிப் படையாகப் புரியும்.

இது ஒரு எளிய உண்மை யே. ஆனால், இந்த எளிய உண்மை யைக்கூட தமிழர்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்பதில்தான், திராவிடக் கோட்பாட்டாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். தமிழகப் பள்ளிகளின், கல்லூரி களின் பாடத் திட்டங்கள் மேற்கண்ட வரலாற்றை மறைக்கின்றன.

திராவிட அரசர்களின் ஆரியக் கொள்கைகளை மறைப் பதும், தமிழர் மரபான ஆரிய எதிர்ப்பை இருட்டடிப்பு செய்வதுமே இவர்களின் நோக்கம் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஆரியத்தின் பிள்ளையே திராவிடம்!

ஆரியம், சிந்துவெளியில் தமிழரை வென்றது. அப்போது ஆரியத்துக்கென அரசு இல்லை கட்டிக்காக்க வேண்டிய நாகரிகம் இல்லை. எனவே, அழித்தொழிப்புப் போர் நடத்தி, தமிழரை வீழ்த்தியது.

பின்னர், ஆரியம் தமக்கென அரசுகளை உருவாக்கிக் கொண்டது. அப்பகுதியே விந்திய மலைக்கு வடக்கே உள்ள ஆரியவர்த்தம் எனப்பட்டது. தமிழர், அரசுகள் ஆரியரைப் படையெடுத்து வென்று இந்திய நிலப்பரப்பில் தமிழரது மேலாண்மையை நிலை நிறுத்திய போதெல்லாம், ஆரியம் தமிழரிடம் தோற்றுச் சரணடைந்தது. ஆனால், ஆரியம் மிக நுட்பமாக செய்த இரண்டகம், தமிழ் இனத்தில் ஆரியக் கலப்பை ஏற்படுத்தி, தமிழ்ப் பேரினத்தை, தெலுங்கர், கன்னடர், மலையாளி எனப் பிரித்தமைதான்.

சங்ககாலத்தின் இறுதி முதல், இன்றுவரை தமிழருக்கு எதிராக ஆய்தம் ஏந்தும் இனங்களாக மேற்கண்ட தெலுங்கர், கன்னடர் இனங்கள்தான் உள்ளன. இவை, ஆரியத்தின் பிள்ளைகள்தான். இம்மொழிகளில் சமக்கிருதம் மிகையாக உள்ளது. இவ்வினங்களின் மதிப்பீடுகள் ஆரியத்திற்குச் சார்பான வையாக உள்ளன. இந்தி மொழி யைக் கற்பதில் இவ்வினங்கள் ஆர்வம் காட்டுகின்றன. தென் னிந்திய நிலப்பரப்பில் இந்தியை ஏற்காத ஒரே இனம் தமிழ் இனம் தான். தெலுங்கு, கன்னட இனத்தவர் தமிழரை ஆண்ட காலங்களில் எல்லாம், வட மொழியையே தூக்கிப் பிடித்தனர். அந்தளவு இவ்வினத் தவருக்கு ஆரியத்தின் மீது பற்று உண்டு.

பல்லவர்கள் தம்மை ‘பரத்வாஜ கோத்திரத்தார்’ என்றுதான் அழைத்துக்கொண்டனர். பரத்வாஜ கோத்திரம் என்பது, ஆரிய பார்ப்பன குலம் ஆகும். உண்மையில் இவர்கள் பார்ப்பனர் அல்லர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆயினும், தம்மை பார்ப்பனர் எனப் பொய்யாகவேனும் கூறிக்கொள்ளு மளவு ஆரியத்தில் கரைந்து போன வர்கள் என்பதைக் குறிக்கவே இச்சான்றை முன் வைக்கிறேன்.

பிற்காலச் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், 13 ஆம் நூற்றாண்டு முதல், 19 ஆம் நூற்றாண்டு வரை, தமிழரை ஆரியத்தில் ஊறிய விஜயநகரப் பேரரசும் நாயக்கரும் ஆண்டனர். இக் காலகட்டத்தில், இந்தத் திராவிடர் செய்த அட்டூழியங்களுக்கு அளவே இல்லை.

தமிழரது நிலங்களைப் பறித்து அடிமைகளாக்கினர். சாதியத் தீண்டாமையை அறிமுகம் செய்து வருணாசிரமத்தை நிலைநாட்டினர். வட மொழியையும் தெலுங்கையும் ஆட்சி மொழிகளாக்கினர். பெண் களை வணிகம் செய்த அரசு விஜய நகரப் பேரரசு என்கிறது வரலாறு. தமிழகத்தின் தன்னிகரற்ற முறை யான தேவரடியார் முறையை, தேவதாசி முறை என மாற்றியதும் இந்தத் திராவிடர் ஆட்சியே.

20 ஆம் நூற்றாண்டில், பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற் கெதிரான போராட்டங்களால் தமிழரது தேசிய இன விடுதலை உணர்வு மட்டுப்பட்டது. இதைக் காட்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திராவிடர் என்ற மாயை உருவாக்கப்பட்டு, தேசிய இன விடுதலை உணர்வு பொங்கி விடாது பார்த்துக்கொள்ளப்பட்டது. இப்போதும், தமிழர்களுக்கென தனி அரசு வேண்டும் என்ற கோரிக்கை யை, எந்தத் திராவிட இயக்கமும் தமது கொள்கையாக முன் வைப்பதில்லை. இதற்கான காரணம், திராவிடம் என்ற சொல்லே, தமிழருக்கு எதிரான வரலாற்றைக் கொண்டிருப்பதுதான்.

தமிழரிடையே தமிழ்த் தேசிய இன உணர்வு பீறிட்டுக் கிளம்பும்போதெல்லாம், திராவிட இயக்கத் தலைவர்கள் ‘தமிழனுக்கு நாடு வேண்டும்’ என்பார்கள். அந்தப் போர்க் குணம் மட்டுப்படும் வரை காத்திருந்துவிட்டு, ’திராவிடம்தான் சரி’ என்பார்கள். இது கடந்த ஒரு நூற்றாண்டாகவே நடத்தப்படும் வித்தை ஆகும்.

தமிழரது இனப் போராட்ட வரலாற்றை

1. ஆரியர் - தமிழர் போர்
2. தமிழர் - திராவிடர் போர்

என்ற இரு கட்டங்களாகப் பிரிக்கலாம். ஆரியருக்கெதிரான இறுதி யுத்தத்தில் தமிழர்கள் வென்றனர். சிந்துவெளியில் தோற்றதற்கான காரணங்களில் முகாமையானவை :

• ஆரியர் கூட்டத்திற்கு அழித் தொழிப்பு செய்வது வாழ்வியலாக இருந்தது. ஆகவே, அவர்களால் எளிதில் போர் புரிய முடிந்தது.

• சிந்துவெளித் தமிழருக் கென்று பாதுகாக்க ஒரு பண்பாட்டுக் கட்டமைப்பு இருந்தது. ஆகவே, தற்காப்புச் சமர் புரிந்து தோற்றனர். முன்னேறித்தாக்கிய ஆரியர் வென்றனர்.

• சிந்துத் தமிழரிடத்தில் அறக் கோட்பாடுகள் ஆதிக்கம் செலுத்தின. ஆரியர், சுய நலனையே வேதங்களாக்கினர்.

இந்தக் காரணங்களை வெற்றிகரமாகக் களைந்தனர் சங்ககாலத் தமிழ்ப் பேரரசர்கள். போர்க் கலை வளர்ந்திருந்தது. ஆரியருக்கும் தற்காப்புச் சமர் புரிய வேண்டிய தேவை எழுந்தது. ஆரிய அரசுகளைக் காக்கும் கடமை அவர்களுக்கு உருவானது. ஆனால், தமிழ் வேந்தர்கள் தமது அறச் சிந்தனையின் எல்லையைக் கட்டுப்படுத்தாததன் விளைவாகவே, தமிழரின் தேசிய இன எல்லை சுருங்கியது. ஆரியக் கலப்பைக் கட்டுப்படுத்தாமையாலும், புதிய ஆரியக் குழந்தைகளான திராவிட அரசுகளைத் தொடக்கத்திலேயே ஒடுக்காமையாலும் தமிழர் அரசுகள் தோல்வியைத் தழுவின.

விஜயநகரப் பேரரசு, நாயக்கர் ஆட்சி, ஆகிய திராவிடக் காலகட்டத்தில் தமிழரால் எதிர்த்துப் போரிடக் கூட இயலவில்லை. எங்கெங்கு காணினும் இனக் கலப்பு மிகுந்துவிட்டது. இந்தத் துரோக வரலாறு தமிழர்களுக்குத் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, ’திராவிடம்’ என்றாலேயே புரட்சிகர மான சொல் என்பது போல் மடை மாற்றம் செய்யப்பட்டது.

குருதித் தூய்மைவாதம்

இப்போது, தமிழினம் குறிப்பிட்ட எல்லைக்குள் குறுகி நிற்கிறது. ஆயினும், இதுவே தமிழினத்தின் போர்க்களம். இந்தக் களத்தில், பல்வேறு இனத்தவரும் தமிழராய்க் கலந்துதான் நிற்கின்றனர். தூய தமிழ்க் குருதி வாதம் தமிழ் இனத்தின் மரபுக்கு எதிரானது. ஏனெனில், தமிழ் இனம் என்பது, ஒரு பேரினம் ஆகும். இந்திய நிலப்பரப்பு எங்கும் ஆண்ட இனம் இது. இவ்வினத்தில் பல்வேறு சிறு இனங்கள் கால வெள்ளத்தில் கலந்துவிட்டன. அவற்றை ஏற்று அவ்வினத் தவரையும் தமிழர் ஆக்கியதுதான் தமிழின் சிறப்பு.

பல்லவர் குல அரசர்களில் ஒருவரான ஐயடிகள் காடவர்கோன், தமிழை ஏற்று சிவனியத்தைத் தமிழில் பரப்பினார். கூற்றுவ நாயனார் எனும் சிவனியத் தொண்டர் களப்பிரர் வழி வந்தவர்தான்.

இவர்கள்போல் ஏராளமான சான்றுகளைக் காட்டலாம். இந்திக்கு எதிராக நடந்த போரில் தமிழ் வாழ்க என முழக்கமிட்டு உயிர் நீத்த ஈகிகளில் பிற இனத்திலிருந்து உருவான மறவர்களும் உண்டு.

விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில், தோல் தொழில்களுக்காகவும் பிற ஏவல் பணிகளுக்காகவும் அடிமைகளாக அழைத்துவரப்பட்டவர்கள் சக்கிலி யர் எனப்படும் அருந்ததியர். கடும் உழைப்பாளர்களான இம் மக்களைத் திராவிட அரசர்கள், அடியாட்களாகவும் பயன்படுத்தினர். மதுரை வீரன் அவர்களில் ஒருவர்தான். திருமலை நாயக்கனின் சாதி வெறியால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் மதுரை வீரன்.

அவரைத் தமிழர்கள் இன்று தங்கள் தெய்வமாக்கிக் கொண் டுள்ளனர். தமிழரின் சிவன் கோயில்களிலும், சிற்றூர் குல தெய்வக் கோயில்களிலும் கூட மதுரைவீரன் சிலை வணங்கப் படுகிறது. இதுவே, தமிழரின் அறச் சிந்தனை மரபின் சான்று.

அருந்ததியர் மக்கள் இன்று சந்திக்கும் சாதிக் கொடுமைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் திராவிட அரச குலத்தவர்தான். ஆனால், திராவிட அரசர்கள், தமிழரிடையே சாதிய மோதல்களைத் திட்டமிட்டு வளர்த்தெடுத்து, ஒற்றுமையின்மை யை உருவாக்கி விட்டனர். அருந்ததியர்கள் இன்று கடை நிலை இழிவைச் சந்திக்கும் பிரிவினராக வாடுகின்றனர். இம்மக்கள் தமிழர்கள் தான். இவர்களின் இழிவைப் போக்க வேண்டிய முதற்கடமைத் தமிழ்த் தேசிய அரசியலுக்குத்தான் உண்டு.

இதுபோலவே, திராவிட அரசர்கள் காலத்தில் குடியேற்றம் செய்யப்பட்ட கன்னட, தெலுங்கு வழியினர் அனைவரும் இன்று தமிழர்களே! இதில் குருதித் தூய்மைவாதம் கூடாது. தமிழ்த் தேசிய அரசியலில் கரம் கோக்க வேண்டிய கடமை இவர்களுக்கும் உண்டு. ஆனால், இம்மக்களைத் தெலுங்கராவும் கன்னடராகவுமே நீடிக்க வைக்கும் சதிச் செயல்களில் திராவிட இயக்கங்கள் தொடர்ந்து ஈடுபடுகின்றன. இச்சதியை முறித்துக் கொண்டு வந்து தமிழராகத் தலைநிமிர்த்தும் பொறுப்பு இம் மக்களுக்கு உள்ளது. தமிழ்த் தேசியக் கருத்தியல் இவர்களை அரவணைக்க வேண்டும்.

தமிழ், களப்பிரர்களை, பல்லவர்களை, நாயக்கர்களை, பிரிட்டானியர்களையெல்லாம் கண்டுவிட்டு செம்மாந்து நிற்கும் மொழி. இம்மொழியைப் பிற மொழிகளால் எவ்வாறு அழிக்க முடியவில்லையோ, அதேபோல பிற இனங்களால், தமிழ் இனத்தை அழித்துவிட முடியாது. ஆனால், இனத்தின் பாதுகாவலர்களாக தமிழர்கள் தம்மை உணர வேண்டும். போராடாத இனம் வெல்லாது. ஈழத்தில் நடப்பது ஆரியத்தின் நவீன வடிவங்களான சிங்கள - இந்திய கூட்டணிக்கு எதிரான தமிழரின் போர்தான்.

தமிழினத்தின் போராட்ட வரலாற்றின், சுருக்கம் நமக்கு உணர்த்தும் உண்மைகள்,
ஆரியமே தமிழரின் முதல் பகை, திராவிடம் ஆரியத்தின் கிளை! - என்பவையாகும்.

இந்தப் பாடங்களிலிருந்து, எதிர்காலத்தைத் திட்டமிட வேண் டும். திராவிட இனங்களான/ஆரிய பார்ப்பனியத்தில் தோய்ந்த இனங்களான கன்னட, தெலுங்கு, மலையாள இனங்கள் தமிழர் நிலத்தைப் பறித்துக் கொள்ளச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இவ்வினங்கள் ஒருபோதும் தமிழருடன் நட்பு பாராட்டா.

இந்திய தேசிய ஒடுக்கு முறை என்பது, இந்தி பேசும் மக்கள் நேரடியாக தமிழர் மீது படையெடுத்து வருவது அல்ல; ஆரியத்தின் தென்னிந்திய சட்டாம்பிள்ளைகளாக உள்ள தெலுங்கு, கன்னட, மலையாள இனங்கள், இந்தியாவின் தமிழர் மீதான ஒடுக்குமுறை வடிவங்கள்.

இவ்வினங்கள் தமக்குள் உள்ள எல்லைச் சிக்கல்களை சுமுகமாகவும் விட்டுக்கொடுத்தும் தீர்த்துக்கொள்கின்றன. ஆனால், தமிழகத்துடன் உள்ள சிக்கல்களில் மட்டும் ஆதிக்க மனப்பாங்குடன் செயல்படுகின்றன. இதற்குக் காரணம், இவ்வினங்களுக்குத் தமிழர் மீது உள்ள இனப்பகையே ஆகும். இந்த இனப்பகையை, இந்தியம் வளர்த்தெடுக்கிறது.

ஆகவே, திராவிடம் - இந்தியம் இரண்டும் தமிழினத்தை எதிர்க்கின்றன, அழிக்கத் துடிக் கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

திராவிடம் குறித்த நமது ஆய்வு முடிவுகள் அனைத்துமே, தமிழ் இன விடுதலைக்கான தேடலின் விளைவுகள்தாம். திராவிடர் என்றால் பார்ப்பனர் வரமாட்டார் என்ற வாதம் முழுக்க முழுக்கப் பொய்யானதும், தமிழின விடுதலை உணர்வை மட்டுப் படுத்தியதும் ஆகும்.

இந்தியத்தைப் போலவே ‘திராவிடமும்’ தமிழரின் முகவரியை மறைத்தது. இவை இரண்டுமே தமிழர் தன்னுணர்வு பெறுவதைத் தடுத்தவை; தடுத்து வருபவை.

தகவல்களுக்கு உதவிய நூல்கள்:

சிந்து முதல் குமரி வரை - குருவிக்கரம்பை வேலு
பல்லவர் வரலாறு - முனைவர் மா. இராசமாணிக்கனார்
சோழர்கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல் - முனைவர் மே.து.இராசுகுமார்

- ம.செந்தமிழன்

நன்றி: தமிழர் கண்ணோட்டம் இணையத்தளம்.

Tuesday, June 29, 2010

"கலையும் இலக்கியமும் "

"கலையும் இலக்கியமும் "
மக்களை மேம்படுத்தாத கலை என்பது போர்களமில்லாத போர்வீரர்கள் போன்றதுதான்.படைப்பாளிகள்,எழுதாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் வேலை பொதுமக்கள் பேசும் மொழியை கற்றுகொள்வது தான்.பொதுமக்கள் என்பவர்கள் யார்? நமது மக்கள் தொகையில் தொண்ணூறு விழுக்காட்டிற்கும் மேலுள்ள தொழிலாளர்கள்,விவசாயிகள் ஆவர்.உலகத்திலேயே பரிசுத்தமான மக்கள் தொழிலாளிகளும்,விவசாயிகளும்தான். அவர்கள் கையில் புழுதி படிந்து இருந்தாலும்,அவர்கள் கால்களில் சாணம் ஒட்டிக்கொண்டு இருந்தாலும் அவர்கள் தான் "பூர்ஷ்வா-குட்டி பூர்ச்வாக்களை விட சுத்தமானவர்கள்.நமது இலக்கியமும் ,கலையும் இவ்வர்கதிர்க்கு முதலில் சேவை செய்ய வேண்டும். ......................................................நமது தோழர்களில் பலருக்கும் குட்டி பூர்ஷ்வா மனோபாவமிருக்கிறது அவர்களில் பலர் ,படிப்பாளி வர்கத்தை சேர்ந்தவர்களாவர்.ஆகவே தான் அவர்கள் தங்களை போன்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும்,அதன் விளைவாக இந்த படிப்பாளி வர்கத்தை பற்றி ஆராயவும்,வர்ணிக்கவும் தலைபட்டுவிடுவதில் அவர்களுக்கு ஒரு பிரியம் ஏற்பட்டுவிடுகிறது. இதே காரியத்தை அவர்கள் பாட்டாளி வர்க்க மனோபாவத்தில் அவர்கள் செய்வார்களேயானால் அது மிகவும் பயனுடையதாக இருக்கும்.அனால் செய்வது இல்லை. குட்டி பூர்சுவா மனோபாவத்தில் இந்த தோழர்கள் ஆராய்வதும்,வர்நிபதுமாக குட்டி பூர்சுவா வர்கத்தை பிரதிபலிக்கும் நூல்களை போற்றுகிறார்கள்.குட்டி பூர்சுவா மனோபாவம் கொண்ட படிபாளிகளிடம் பரம அனுதாபம் காட்டுவதும், சிலசமயம் குட்டி பூர்சுவா குறைபாடுகளை அனுதாபத்தோடு பார்த்து,அதற்காக பரிந்து பேசுவதையும் நாம் பார்த்து இருக்கிறோம்.
இத்தகைய தோழர்களுக்கு,தொழிலாளர்கள்,விவசாயிகள்,சிப்பாய்களிடம்(மக்கள் போராளிகள்-அழுத்தம் நம்முடையது) உண்மையான தொடர்பு கிடையாது.அவர்களை பற்றிய ஆராய்ச்சியோ,விஷய ஞானமோ இல்லாதததாலும்,அவர்களிடையே நெருங்கிய நண்பர்கள் அதிகமில்லாததாலும் இந்த பகுதிகளை போதிய அளவு வர்ணிக்க அவர்களால் முடியவில்லை.....................................
இவர்கள் மக்கள் கலைகள் சுவரொட்டி சித்திரங்கள்,செய்திகள்,நாடோடி பாடல்கள்,பாமர கதைகள்,அவர்கள் வீட்டு மொழி போன்றவையை அருவெருக்கிறார்கள். அதே சமயம் பூர்சுவாக்களின் வாய் வீசுகளை ஏற்றுகொள்கிறார்கள். இத்தகைய தோழர்கள் குட்டி பூர்சுவா பக்கம் உள்ள வெளியின் மீது மிக வசதியாக அமர்ந்துகொண்டுள்ளார்கள்.இன்னும் நாசூக்காக சொல்லவேண்டுமென்றால் இவர்களது மேதாவிலாச ஆத்மாக்கள்,குட்டி பூர்சுவ மாளிகையில் விலாவி நடமாடுகின்றன.
..............................ஆக நம் எழுத்தாளர்களும்,கலைஞர்களும், படைப்பாளிகளும், தங்களது அடிப்படைகளை மாற்றிக்கொண்டு,தொழிலாளர்கள்,விவசாயிகள்,சிப்பாய்கள் பக்கமாக,படிப்படியாக நகர்ந்து செல்லவேண்டும். அவர்கள் வாழ்க்கையில் வூடுருவி புகுந்துகொள்ள வேண்டும். அவர்களது போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுதுகொள்ளவேண்டும்.
......ஒரு உண்மையான இலக்கியத்தையும்,கலையையும் தொழிலாளர்கள்,விவசாயிகள்,சிப்பாய்கள் (மக்கள் போராளிகள் ) என இவ்வர்கதிர்க்காக படைப்பதே படைப்பாளியின் கடைமையாக இருக்க வேண்டும்.

கலை இலக்கியத்தை பற்றி யேனானில் 1942 may 2 to 23 வரையிலான சீன விடுதலை போராட்ட மாநாட்டில் பொதுவுடைமை தந்தை மாசேதுங் பேசியது.

Monday, June 21, 2010

my poem

எல்லோருக்கும் எல்லாம்
கிடைத்துவிட்டால்
கடவுள் எதற்கு?
கம்யுனிசம் எதற்கு?
ஒவ்வுறு மனங்களுக்கும்
ஒவ்வுறு தேடல்,ஒவ்வுறு
பயணம்.ஒரு
போமமலாட்டகாரனின் பிடியில்
இருக்கும் போம்மையாக்தான் என்
நேசிப்புகுரியவரின் பிடியில் நான்!
அரங்கம் அதிர ஆடினாலும்
ஆட்டத்திற்கு சொந்தக்காரன்
நானல்ல!காற்றின்
திசைக்கு தலையாட்டும்
இலைகளாகதான் என்
மனமும் அலைபாய்கிறது-
இலக்கு அறியாமல்!
தன்னை எரித்து நிலவுக்கு
உயிரூட்டினாலும்
சூரியனின் காதல்
நிலவுக்கு தெரிகிறதா என்னை!
தன்னை ஸ்பரிசித்து செல்லும்
மேகங்களிர்காகதானே
தவமிருக்கின்றன!
என்னதான் நதிகளை
கரைகள் காதலோடு
பாதுகாத்தாலும் நதியின்
தேடலோ கடலை சங்கமிப்பது தானே!
நதிகளை காக்கும் கரைகளின்
காதலாகத்தான் எண்
"மனமும்"-
என் கண்ணீர்
யாருக்கும் தெரிவதில்லை-
மழையில் அழும் மலர்களைப்போல!
இருந்தும் நேசிக்கிறேன்
வலியும் ரணமும்
ஆயிரம் கோடி
பருந்துகலாக நெஞ்சை
குத்தி தின்றாலும்
என் நேசிப்பில் குறைவில்லை
மனிதர்களை காக்க
என் பயணமும் தொடர்கிறது-
தொடர்வண்டியை சுமக்கும்
தண்டவாளமாய்!

‘இராவணன்’ - கார்ப்பரேட் ராமன்!

‘இராவணன்’ - கார்ப்பரேட் ராமன்!
நிகழ்காலத்தில் ஏற்படும் அரசியல் அதிர்வுகளை அப்படியே பார்ப்பனிய நஞ்சு கலந்து வணிகமாக்கும் கலையை (!) கற்றவர் மணிரத்னம். அதில் கொஞ்சமும் அச்சு பிசகாமல் வந்திருக்கும் அவரின் சமீபத்திய வெளியீடு “இராவணன்” தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் தேசிய சந்தையை குறி வைத்து எடுத்த இப்படத்தில் அவர் கையில் எடுத்திருப்பது இந்திய பழங்கடி மக்களின் பிரச்சனைகள்.
‘வரலாற்று நம்பிக்கைகள் + காட்சி திருட்டு + அக்குள் தொப்புள் தெரியும் ஆபாச நடனம் + பார்ப்பனிய புரட்சி = மணிரத்னம் படங்கள்’ என்ற அவரின் வழக்கமான ஃபார்முலாவை மீறாமல் வந்திருக்கும் இப்படம் பார்வையாளர்களை சிந்திக்க விடாமல் குழப்பியுள்ளது. பிரமாண்ட காட்சிகளின் மூலம் பிரமிப்பில் ஆழ்த்தி மறுபுறம் எக்காலத்திலும் மக்கள் தங்கள் விடுதலைக்கான போராட்டங்களில் அணிதிரண்டு விடக்கூடாது என்ற முதலாளிய சூழ்ச்சிகளை செவ்வென செய்திருக்கிறது.
பழைய இராமாயண கதையை இன்றைய கார்ப்பரேட் சமூகத்திற்கேற்ப மாற்றினாலும் பழைய நச்சுத்தன்மையை குறைவில்லாமல் நவீன தொழிற்நுட்ப வசதிகளுடன் பாமர மக்கள் மீது திணித்துள்ளார்,. மேட்டுக்குடிகளால் தூக்கி பிடிக்கப்பட்டும் புதுமைவாதி (!) மணிரத்னம்.
விடுதலைப் போராட்டமா? காதலா? என்ற கேள்வியில் காதலே முக்கியம் என தீர்ப்பளிக்கிறார். தன்னுடைய இராவணனில். தேசிய இன விடுதலை வேட்கை கொண்ட ஒரு போராளி பெண்ணை, கண்ணியமற்ற, பிழைப்புவாத இளைஞன் துரத்தி துரத்தி காதலித்து அவளை தன்னோடு சேர்த்து குண்டு வைத்து தற்கொலை செய்து கொள்கிறான். அத்தோடு அக்கொள்கையையும் சேர்த்து வெடித்து சிதற வைத்ததை ‘உயிரே’ வில் காட்டிய மணிரத்னம், இராவணனில் கொஞ்சம் மாற்றியுள்ளார். இங்கு போர்குணமிக்க போராளி-பழங்கடி ஆண். அவன் ஒரு நவநாகரீக மேட்டுக்குடி பெண்ணின் அதிகார திமிரையே வீரமென அசந்து காதலித்து அவள் கணவனால் சுடப்பட்டு வீழ்கிறான். பாமர மொழியில் சொல்ல வேண்டுமென்றால் இக்‘கள்ளக்காதலுக்காக’ தன்னையே இழக்கும் போராளியின் இறப்பின் மூலம் பழங்குடி மக்களின் உரிமைகளையும் சேர்த்து அந்த மலையிலிருந்து தள்ளி கொன்றுவிடுகிறார் இந்த இந்து பார்ப்பன விடுதலை விரும்பி!
முதலில் பிறர் மனைவியை ஒரு போராளி நேசிப்பதாக காட்டுவதே கேடுகெட்டதனம். போராளிகளை ஒழுங்கீனமானவர்களாக சித்தரிப்பதன் மூலம் உரிமைகளுக்கான போராட்டங்கள் மீதான நம்பிக்கைகளை இழக்கச் செய்யும் பார்ப்பன சூழ்ச்சி யே இது.
ஆதிக்க வெறியை உதிர்த்த வார்த்தைகளிலும், ஒற்றைப் பார்வையிலும், நீளமான கூந்தல் முகத்தில் பட்ட பரவசத்திலும் காதல் வந்து போராளி வீழ்ந்து போவதாக எந்த தைரியத்தில் கதை அமைத்தீர் திருவாளர் மணிரத்னம் அவர்களே! எதற்காக இந்த புனைவு? என்ன சொல்ல வருகிறீர்? ஆயுதம் வேண்டாம், அரசே! கோடிகணக்கில் செலவு செய்ய வேண்டாம், மக்களுக்காக போராடும் போராளிகளை சாய்க்க ஒரு பெண் போதும் என்கிறீரா? பெண்ணின் கடைக்கண் பார்வையில் கொள்கையை பலியிட்டு விடுவர் போராளிகள் என எக்காளமிடுகிறீர்களா? உங்கள் அத்தியாயத்தில் காதல் என்றால் இதுதானா? நுகர்வு கலாச்சார போதையில் உடலை பிரதானமாக்கி, மூலதனமாக்கி காதலிக்க உங்கள் மேட்டுக்கடி வர்க்கத்தால் மட்டுமே முடியும். அதையும் தான், அந்த கீழ்த்தரமான காமத்தையும் தான் இரவு பார்ட்டிகளில் உடல் உரசலில் பற்றி கொள்ளும் டேட்டிங் காதலாக ‘ஆயுத எழுத்தில்’ திரிசா-சித்தார்த் கதாபாத்திரங்கள் மூலம் காட்டி கடைச்சரக்காக்கி விட்டீரே!
ஆனால் உழைக்கும் வர்க்கத்தின் காதல் இப்படிப்பட்டதல்ல. எம் வர்க்கத்தின் காதல் கண்கள் சந்தித்த உடன் பற்றிக்கொள்ளும் நெருப்பல்ல. உணர்வுகளால் கலந்து கொண்ட இரண்டு உள்ளங்களின் அழகிய ஈர்ப்பு. போராளிகளுக்கு காதல் வரும் அது கருத்துக்களால், கொள்கைகளை அன்பாய் பரிமாறிய இரண்டு உயிர்கள் ஓருயிராய் சங்கமித்து ஒற்றை இலட்சியத்தை நோக்கி பயணிக்கும் வீரிய பயணம்.
அதிகார வெறிபிடித்த மேட்டுக்குடி கழிசடைகளுக்கு உழைக்கும் வர்க்கத்தின் காதல் தெரியாது. புரியாது. எங்கள் உடம்புகளில் உங்கள் இச்சைகளை திணிக்காதீர்.
ரோஜாவில் காஷ்மீரிகளையும், பம்பாயில் இசுலாமியர்களையும், உயிரேவில் இந்தியாவின் கிழக்கு மாகாண மக்களையும், கன்னத்தில் முத்தமிட்டாலில் ஈழத்தமிழர்களையும் கொச்சைப்படுத்திய மணிரத்னம் இராவணனில் பழங்குடிகளை அடிபாதாளம் வரை சென்று இழிவுப்படுத்தியுள்ளார்.
எஸ்.டி.எஃப் (ளுகூகு) காவல்படையினரை கொடூரமாக வெட்டி, உயிரோடு தீவைத்து கொளுத்தி தொடக்க காட்சியிலேயே பழங்குடிமக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறார் இந்த பார்ப்பன புரட்டுவாதி. காட்டுமிராண்டிகளை போல கொடூரமாக காட்டி, கோபமும் வெறியுமே அவர்கள் பண்பாடாக காட்டி, உண்மையான பழங்குடி மக்களின் பண்பாட்டை பாழ்படுத்தியுள்ளார். இயற்கையோடு இணைந்து, கிடைத்ததை உண்டு வாழும் தேவைக்கான வாழ்க்கையை நடத்தும் சமத்துவவாதிகள் தான் பழங்குடிகள். மணிரத்னம் தூக்கிப் பிடிக்கும் மேட்டுக்குடிகளை போல லாபத்திற்கான சுரண்டலை செய்யும் மிருகங்களல்ல பழங்குடிகள்.
படம் துவங்கிய உடன் கொடூரமாய் கொலைவெறி பிடித்தவர்களாய் காட்டியதன் மூலம் முதலிலேயே பழங்குடிகள் செய்யும் அனைத்தும் மோசமானதாய் இருக்கும் என நம்பும் வகையில் படம் பார்க்கும் பார்வையாளனை தயார்படுத்திவிடுகிறார். இதனால் பார்வையாளர்களிடம் வில்லனாக்கப்பட்ட பழங்குடிகளின் நியாயங்கள் எடுபடாமலே போய்விடுகிறது. அதன்பின் மிஸ்டர் மணிக்கு வேலை சுலபமாகி விடுகிறது. காவல்துறை கொடூரங்களை, அத்து மீறல்களை காட்சிகளாய் அடுக்கி கொண்டே போனாலும் பார்வையாளர்களிடம் எவ்வித எதிர்ப்புமில்லை. பழங்குடிகள் செய்த கொடுமைகளை தடுக்க தான் பாவம் காவல்துறை இப்படி எல்லை மீறுகின்றனர் என பார்வையாளர்களை சால்ஜாப்பு சொல்ல வைத்துவிடுகிறார். எப்படியென்றால் தொடர்ச்சியாக ரவுடிகளை என்கவுண்டர் செய்து வரும் காவல்துறை சட்டென அடுத்து போராளிகளை சுட்டு கொல்ல, அவரையும் மக்கள் ரவுடியாகவே எண்ணிவிடுவர். நிஜத்தில் தரகு முதலாளிய அரசு செய்யும் இந்த இழி தந்திரத்தை திரையில் செய்துள்ளார் முதலாளிய வர்க்கத்தை அண்டிப்பிழைக்கும் புதுமை (!) படைப்பாளி மணிரத்னம்.
இதன் நீட்சி தான் கதாநாயகன் பழங்குடி தலைவன் வீராவின் (விக்ரம்) தங்கை வெண்ணிலா (ப்ரியாமணி) தன்னை காவல்துறையினர் கற்பழித்துவிட்டதாக கதறும் போது கூட எந்தவித சலனமுமில்லாமல் பார்வையாளர்கள் படம் பார்க்கின்றனர். ஈழத்தமிழினம் அழிந்து கொண்டிருக்கும் போதே வேடிக்கை பார்த்த நடுத்தர வர்க்கம் இதற்கு மட்டும் பெண்ணுக்கெதிரான கொடுமையென கிளர்ந்தெழுந்து திரையை கிழித்துவிடுவார்களா என்ன! அதே சமயம் இப்படிப்பட்ட தவறு செய்யும் காவலர்கள் கூட முறுக்குமீசை வைத்து ‘ஏலேய்’ என திருநெல்வேலி மொழி பேசும் இடைநிலை சாதியினர் தான். ஆனால் வெள்ளை நிறத்தில், மீசை மழித்து மொழு மொழுவென எஸ்.டி.எஃப் தலைமை உயரதிகாரி பார்ப்பன தேவ் பிரகாஷ் (பிரித்விராஜ்) மிக ஒழுக்கமானவராம். அதாவது ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்கள் மீது வன்முறை செலுத்துவது, தரம்கெட்டு நடப்பது இடைநிலை சாதியினர் அதாவது சூத்திரர்கள்தான். ‘நாங்கள் எதிரியாய் இருப்பவர்களிடமும் சரியாக நடக்கும் நியாயவாதிகள்’ என கட்டமைக்கும் மனுதர்ம மொழியிது. இடதுசாரிகளின், புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்களாலும், நம் அய்யா பெரியாரின் சீர்திருத்த போராட்டங்களாலும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும்-இடைநிலை சாதி மக்களுக்கும் ஏற்பட்ட, ஏற்பட்டு வரும் ஒற்றுமையை கண்டு பொருமி போய் வைத்த சாட்சி சதியை தவிர வேறொன்றுமில்லை.
‘வீராவை அவன் மக்கள் கடவுளாக பார்க்கின்றனர். இருந்தாலும் அவன் கெட்டவன் அவனை அழிக்கணும்’ என்கிறான் தேவ் பிரகாஷ். சில நிமிடங்களில் பழங்குடி மக்களை விசாரிக்கிறான் தேவ் பிரகாஷ். அப்போது “வீரா ‘நல்லவன்’, ‘மிருகன் போன்றவன்’, ‘கோமாளி’, ‘கெட்டவன்’, ‘பெண் பித்தன்’ என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்கிறர்கள். அதாவது சொந்த மக்களிடமே போராளி (வீரா) தள்ளி இருக்கிறான். ஆதரவு இல்லை என தனிமைப்படுத்தும் முயற்சியிது. யதார்த்தத்தில் போராளியென்பவன் மக்களில் இருந்து வருபவனே. மக்களை திரட்டி போராட்டத்தையும், புரட்சியையும் நடத்துபவனே போராளி. உண்மையை வரலாற்றை மாற்றி சொல்வது பார்ப்பனர்களுக்கு புதுசொன்றுமில்லை. சிந்து சமவெளி நாகரிகத்தையே ஆரிய நாகரிகமாக சித்தரிப்பவர்கள் தானே!
படத்தின் வசனங்கள் சுகாசினி வழக்கமாக தனது படங்களுக்கு “பீட்டர் பார்ட்டி” சுஜாதாவை பயன்படுத்துவார் மணி. பாவம் அவர் இறப்புக்குப்பின் (தமிழர்கள் தப்பித்தனர்) வசன பஞ்சத்தால் தன் மனைவியையே வசனகர்த்தாவாக்கிவிட்டார்.தொலை
காட்சி முன்பு உட்கார்ந்து கொண்டு வாயில் நுழையாத பெயர்களை, சினிமாக்களை எல்லாம் சொல்லி விடும் பீலாவை இப்படத்திலும் பேச தவறவில்லை நம்ம அம்மையார் சுகாசினி. அப்படியே பெண் இனத்துக்கே போராடும் புதுமைப் பெண் போல தான் ராகினியை (என்ன ஒரு தமிழ்ப்பெயர் ஆஹா!) (ஐஸ்வர்யாராய்) பேச வைத்துள்ளார். ‘ஆண்களின் சண்டையில ஏன் பெண்களை இழுக்குறீங்க’ என்கிறார். பெண்ணியவாதி சுகாசினி அவர்களே! பெண்கள் பங்கேற்காமல் எந்த புரட்சியும், விடுதலையும் வென்றதாக வரலாறில்லை. ஈழ விடுதலைப் போரில், இசுரேலுக்கெதிரான பாலஸ்தீன விடுதலைப் போரில், நேபாள வர்க்க போரில் பெருமளவு வீரமாக பங்கேற்றது பெண்களே. உங்க பெண் விடுதலையென்பது இரவு பார்ட்டிகளுக்கு செல்வதும், டி.வியில் லேடிஸ் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் பங்கெடுப்பது மட்டும் தானா? ஆனால் இவ்வளவு வியாக்கியானம் பேசும் சுகாசினி அதே பெண்ணை துருப்பு சீட்டாக வைத்து தான் இறுதியில் தந்திரமாக வீராவை கொல்வான் தேவ்பிரகாஷ். வாலியை மறைந்து நின்று கொன்ற புராண ராமனுக்கும் இந்த நவீன ராமனுக்கும் எந்த வித வித்தியாசமும் இல்லை. இதை என்னவென்று சொல்வார் இந்த உயர் வர்க்க பெண்ணியாதி? தங்கள் சாதி நலனுக்காக பொது சட்டத்தை மீறுவது குற்றமாகாது என்ற மனுதர்மத்தின் கணிப்பொறி திரை வடிவம் தான் இக்காட்சிகள் போல!
‘உயிரை பறிக்கும் உரிமையை யார் தந்தார்?’ என்று வீராவிடம் கேள்வி கேட்டு மனித உரிமை முலாம் பூசும் மானம் கெட்டவர்களே, அதையே தான் திருப்பி கேட்கிறோம். “மக்களை கொல்லும் உரிமையை உங்களுக்கு யார் தந்தார்கள்?’ பல லட்சம் கோடிகளாக மக்கள் பணத்தை சுரண்டும் அம்பானி போன்ற முதலாளிகளா?
தனிமனித வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சியென்று அம்பானியின் வாழ்க்கையை ‘குரு’வில் வணிகமாக்கினீர். நக்கி பிழைத்த அந்த விசுவாசத்திற்காக நன்றி கடனாக ரிலையன்ஸ் அம்பானி இப்படத்தை தயாரித்திருக்கலாம்.
ஆனால் அவரால் இந்திய உழைக்கும் மக்கள் மேலும் ஓட்டாண்டியானது தான் மிச்சம். தமிழகத்தில் மளிகை கடை, காய் கடை நடத்தி வந்தவர்கள். ரிலையன்ஸ் பிரெஷ்னரால் வாழ்க்கையிழந்து, எதிர்காலமிழந்து வறுமையில் தள்ளப்பட்டவர்கள் பல லட்சம். அதில் மானத்தோடு வாழ்ந்த பல குடும்ப பெண்கள் வறுமை சூழலால் விபச்சாரத்திற்கு தள்ளப்பட்ட கொடூரம் இன்றும் நடந்து வருகிறது. பயாஸ்கோப் போட்டு பார்த்தாலும் பூனூல் பெண்ணியவாதிளுக்கு இவைகள் தெரியாது. தெரிந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். இவர்கள் உணர்ச்சியெல்லாம் உயர்வர்க்க பெண்களின் நுகர்வு பண்பாட்டு சுதந்திரத்தை பெறுவதற்கான வெற்று முழக்கங்களே தவிர வேறெதுவுமில்லை.
அருவிக்கு இடையே உயர்ந்த, சாய்ந்த பிரமாண்ட பெருமாளுக்கு முன் ராகினி கண்ணீரோடு வேண்டுகிறார். “கடவுளே அவர்களை (பழங்குடிகள்) கெட்டவர்களாகவே காட்டு. ஏன் எனக்கு இரக்கத்தை கொடுக்கிறாய். எனக்கு மீண்டும் கோபத்தை கொடு” என்கிறார். அப்படியென்றால் ராகினிக்கு வீரா மீது காதல் அல்லது கரிசனம் வந்துவிட்டதா? நியாயவாதி என்று ஏற்றுக் கொண்டாரா? நியாயம் என்று பட்டால் அதன்பக்கம் நிற்பதுதானே மனசாட்சிக்கு கட்டுப்பட்ட அல்லது நீங்கள் சொல்வது போல உங்கள் கடவுளுக்கு கட்டுப்பட்ட ஒன்றாக இருக்கும்! அதையும் தாண்டி ‘அவர்கள் கெட்டவர்கள் பழையபடி அவர்களை வெறுக்க கோபம் கொடு’ என்றால் இது அப்படிப்பட்ட மான சாதீய தூய்மைவாதம் தவிர வெறென்ன! நல்லவனும் கெட்டவனும் உருவாவது சமூகத்தால் தான் என்பது உண்மையை நம்புபவர்களின் கூற்று. ஆனால் நல்லவனும் கெட்டவனும் உருவாவது பிறப்பின் அடிப்படையில் என்பது மனுதர்மமில்லாமல் வேறென்ன! கெட்டவன் யார்? நல்லவன் யார்? என்று அடையாளம் காட்டு என்பது தான் சராசரிகளின் இறை வேண்டுதலாக இருக்கும். கெட்டவன் என ஏற்கனவே முடிவெடுத்து அதில் உறுதியாக இருக்க வரம் கேட்பது என்பது பிறப்பின் அடிப்படையில் மனிதனை பார்க்கும் சாதீய வெறியில்லாமல் வேறென்ன? தற்போது பெருகி வரும் நகரமயத்தாலும், சமூக சீர்திருத்தத்தாலும் பெருமளவு சாதி மறுப்பு திருமணங்கள் நடந்து வருகிறது. அதே போல் உலகமயத்திற்கு பின் ஏகாதிபத்திய சுரண்டல்களால் பழைய மரபுகள் உடைக்கப்பட்டும், வாழ்க்கை தேவையினால் அதை எதிர்க்கும் பொருட்டு உயர் வர்க்க, சாதிகளில் இருந்து ஒருபிரிவு ‘சனநாயகத்தை’ நோக்கி வந்து கொண்டு உள்ளனர். இதை பொறுத்து கொள்ள முடியா சாதீய வெறி தான், மனமாற்றம் ஏற்பட்டாலும் அதை ஒப்புக் கொள்ளாமல் கடவுளிடம் வேண்டும் பார்ப்பனிய தூய்மைவாதம். தீட்டு கழிக்கும் பார்ப்பனவாதம். தனியாக 14 நாட்கள் காட்டில் கணவனை விட்டு பிரிந்து இருந்தாலும் களங்கமில்லாமல் இருப்பதாக காட்டும் சாதீய நிலவுடைமை பார்வையே இது. கற்பு என்பது உடலில் இல்லை. மனதில் இருக்கிறது. அப்பட்டமாக சாதீய வெறியும், பார்ப்பனிய நஞ்சையும் உமிழும் புர்ச்சியவாதி மணிரத்னத்தையும், பூனூல் பெண்ணியவாதி சுகாசினியையும் ஏன் பி.சி.ஆர் சட்டத்தில் உள்ளே தள்ள கூடாது? அப்புறம் இன்னொரு கேள்வி புர்ச்சியாளரே! பழங்குடிகள் காட்டில் பிரமாண்ட பெருமாள் சாமி எங்கு வந்தது?
இராமாயண வடிவில் பழங்குடி மக்களின் படம் என்று விளம்பரம் செய்தே சந்தையில் இலாபம் பார்க்கும் இப்படம் உண்மையில் எள்ளளவு கூட பழங்குடி மக்கள் பற்றி பேசவில்லை. ‘கோடு போட்டா’ என்ற வைரமுத்துவின் ஒற்றைப் பாடலில் மட்டும் மேலோட்டமாக பழங்குடிகளின் நியாயங்களை சொல்லிவிட்டு கடந்து விடுகின்றனர். அதிலும் வார்த்தைகளை தின்ற இசையின் இரைச்சல் தான் அதிகம். அதை தாண்டி ரசிகர்கள் ராகினி, தேவ் பிரகாஷ் நச்சு கருத்துக்களுக்கு பதிலடி தருவார் வீரா என எதிர்ப்பார்த்திருந்தால் ஏமாற்றமே மிஞ்சும். வீரா பெரும்பாலும் “பக் பக்” என்ற கோழி கத்துவதை போலவே கத்தி பதில் தருகிறார். இதை கடந்து பேச தொடங்கினால் பேச்சுக்கு பின் ஓடும் பின்னணி இசை வசனத்தின் ஒலியை குறைத்துவிடுகிறது. ஆஸ்கார் தமிழன் ரஹ்மான் மிக அழகாக பார்ப்பனியத்திற்கு அடிமை விசுவாசத்தை காட்டியுள்ளார். இவை எல்லாவற்றையும் விட வீரா பேசி ஏதாவது மாற்றம் உருவாகிவிட்டால்....?! என பதறி அவர் தொண்டையில் தேவ் பிரகாஷை சுட வைத்து பேச விடாதபடி செய்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்.
ஆரசியல் படம் எடுப்பதாக பீற்றிக் கொள்கிறீரே மிஸ்டர் புர்ச்சியாளரே அரசியல் படம், படைப்பு என்றால் என்னன்னு தெரியுமா? சரி சரி உங்களுக்கா தெரியாமலிருக்கும். தெரியாமலா ஆய்த எழுத்து க்ளைமாக்ஸில் திராவிட கொள்கையை வீழ்த்திவிட்டு சட்டமன்றத்திற்குள் செல்லும் இளைஞர்களில், சன்னமாக காவி உடை போட்ட பெண்ணையும் அனுப்பி உங்க இந்துத்துவ பாசத்தை காட்டிடீங்களே! ‘கருப்பை ‘ வீழ்த்துகிறதாம் ‘காவி’ அடடே என்னே ஒரு அரசியல். ஆனால் நாங்கள் சொல்லும் அரசியல் படம் அது ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிக்க வேண்டும் என்பதே!
சரி இதெல்லாம் உங்ககிட்ட பேசி பிரயோஜனமில்லை. இருந்தாலும் கடைசியா ஒண்ணே ஒண்ணு கேட்டுகிறேன். அதென்ன போராட வரனும்னாவே யாராவது ஒரு பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகனுமா ? உயிரேவில, கன்னத்தில் முத்தமிட்டால், இப்ப இராவணன்ல வெண்ணிலானு கற்பழிக்கப்படுறாங்க. உடனே இதை கண்டு கோபம் பொங்கி கதை நாயகனோ, நாயகியோ போராளியா மாறிடுறாங்க உங்க அரசியல்படி. என்னங்க நடக்குது இங்க. போராட்டம் என்பது ஏதோ உணர்ச்சி வசப்பட்டு தொடங்குறது போல சித்தரிக்கறீங்க...?
போராட்டமோ, புரட்சியோ சமூக பொருளாதார அடிப்படையில் அமைவது. தங்கள் மொழியோ, இனமோ, உரிமைகளோ ஒடுக்கப்படுபவர்களால் அடிமைப்படுத்தப்படும் போது அதை எதிர்த்து உரிமைகளுக்காய் ஒலிக்கும் குரல்-போராட்டம். அதில் உரிமை மீட்கும் போர்-புரட்சி. இதை ஒடுக்கவே ஒடுக்கும் வர்கம் அல்லது ஒடுக்கும் அரசு ஒடுக்கப்படும் வர்கத்தின் மீது பாலியல் வன்புணர்ச்சி போன்ற கொடூர வன்முறைகளை செலுத்துவது, செலுத்துகிறது. அடிப்படை பிரச்சினையை தொடாமல் மேலோட்டமா வன்முறை சம்பவங்களை எடுத்துக்கொண்டு இதிலிருந்து தான் போராட்டங்கள் தொடங்குவதாக சொல்லும் புளுகு வேலையை நிறுத்துங்க. பழைய ரஜினிகாந்த் பட கதாநாயகத்தனத்தை எல்லாம் போராளித்தனமா எங்ககிட்ட காட்டாதீங்க...!
நீங்கள் சொல்வது போல் எம் பழங்குடி பெண்கள் மீது வன்முறை செலுத்தியதால் தான் பழங்குடி மக்கள் போராட வரவில்லை. அது அதிலொரு பகுதியே, ஆனால் எதார்த்தமான உண்மை என்னவென்று இங்கு காண்போம்.
ஒரிசாவில் உள்ள பாக்சைட், இரும்பு கனிம வளத்தின் குறைந்ததபட்ச மதிப்பு சுமார் 4 மில்லியன் டாலர். அதாவது 200 லட்சம் கோடி ரூபாய். இவையில்லாமல் சட்பீஸ்கர், ஜார்காண்ட் போன்ற மாநிலங்களில் மட்டும் யுரேனியம், டாலமைட், இரும்பு தாது உட்பட்ட 28 வகைக்கும் மேலான அரிய வகை கனிம வளங்கள் பல கோடி டன்கள் உள்ளன. இந்த வளங்கள் மைய அரசால் கிட்டதட்ட 90க்கும்
மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து தரப்பட்டுள்ளன.இதற்க்கு டாடா, பிர்லா, இராவணன்
படம் தயாரித்த அம்பானி, கோயங்கோ போன்ற உள்நாட்டு பெரு முதலாளிகள் தரகர்களாக உள்ளனர். இங்கு தொன்மையிலிருந்த பூர்வ குடிகளாக உள்ள பழங்குடி மக்களுக்கு இதை அனுபவிக்க எள்ளளவும் உரிமையில்லை.
1950 லிருந்து 1990 வரை மட்டும் ஏறத்தாழ ஒரு கோடியே 85 லட்சம் பழங்குடி மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு துரத்தியடிக்கப்பட்டுள்ளனர். 90க்கு பின்னான உலகமய, தாராளமய கொள்கைக்குப்பின் துரத்தியடிக்கப்பட்ட பழங்குடி மக்கள் இரு மடங்காக பெருகிவிட்டனர்.
தமிழகத்தில் கூட 16,000 சதுர கி.மீ. பரப்பளவுல்ல காடுகளை குறிவைத்த பன்னாட்டு நிறுவனங்கள் தமிழக அரசை தாரை வார்த்து தரும்படி கேட்க அதற்கு தடையாக இருந்த வீரப்பனை அந்தடிப்படையில் தான் கொன்றது கடந்த ஜெயலலிதா அரசு என குற்றம் சாட்டுவர் இடதுசாரிகள். ஆக துரத்தியடிக்கப்பட்ட, வாழ்விடங்கள் பறிக்கப்பட்ட பழங்குடி மக்கள் அதை மீட்க போராடி வருகின்றனர். கூர்மையடைந்த போராட்டத்தை ஒடுக்க மய்ய அரசால் உருவாக்கப்பட்டது தான் பச்சை வேட்டை என்ற OPERATION GREEN HUNT. இந்த சிறப்பு இராணுவ படையின் அத்துமீறலும் அராஜக நடவடிக்கைகளின் சாகசவாதமான திரை வடிவம் தான் மணிரத்னத்தின் இராவணன். அதனால் தான் ராகினியின் மூலம் “கொல்ல உரிமை தந்தது யார்? என கேட்ட சுகாசினியும், மணிரத்னமும் “தடையா இருந்தா என்கவுண்டர் செஞ்சிட்டு போயிட்டே இருங்களேன்” என ஆணவமாக மற்றொரு இடத்தில் பழங்குடிகளுக்கு எதிராக கொக்கரிக்கின்றனர். தரகு முதலாளிகளுக்கு சேவை செய்யும் அரசு பயங்கரவாதத்தின் குரலாக ஒலிக்கிறது இராவணன். அதுதான் ஒருபுறம் ஆயுதங்களால் தரகு முதலாளிய அரசு பழங்குடிகளை ஒடுக்கி வர மறுபுறம் மணிரத்னம் போன்ற பூனூல் தேசியவாதிகள் கள்ளக்காதல் மூலம் போராளிகளை வீழ்த்தும் விஷுவல் விசத்தை படமாக்கி பரப்புகின்றனர். இதற்கு பலியான நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அப்பாவி (!) ஏ சென்டர் அறிவுஜீவி அடிமைகள் கேமரா ஷாட், லொகேசன்ஸ்னு வித்தியாசமாக, பிரமாண்டமா காட்டி மிரட்டிட்டாரு மணிரத்னம்” என்கின்றனர். அசிங்கத்தை டாப் ஏங்கிளில் காட்டினால் என்ன? ஒயிடு ஏங்கிளில் காட்டினாலென்ன? அசிங்கம் அசிங்கம் தானே. ‘விசத்தை தருகிறார்’ என்கிறோம் நாம். ‘தேன் தடவி, சர்க்கரை கலந்து தருகிறார் இனிப்பாய் இருக்கிறது’ என்பதை போல தான் தொழில்நுட்ப ரீதியாக மணிரத்னத்தின் படைப்பை பாராட்டுவதாகும். இந்த பிரமிப்பை தான் தனக்கான மூலதனமாக்கி, நம் வர்க்கத்திற்கெதிராக படம் எடுத்து சந்தையாக்கி, கொள்ளை இலாபமும் அடித்துவிடுகிறார். டி.வி. பெண்ணியவாதியான ( தொலைக்காட்சியில் மட்டும் வாய்கிழிய பெண்ணியம் பேசும் குரூப்கள்) சுகாசினியின் கணவர்.
புர்ச்சியாளர் மணிரத்னமே !
எதிரி நேருக்கு நேர் எதிர்ப்பான்
துரோகி உறவாடி கெடுப்பான்
துரோகத்தின் மொழி தான் பார்ப்பனியம். தமிழகத்தில் கோலோச்சிய பகுத்தறிவு கொள்கையினால் தன் வர்க்கம் விழாமலிருக்க தன்னை கடவுள் மறுப்பாளராக காட்டிக் கொண்டே பார்ப்பனியத்தை தூக்கி பிடிக்கும் தரகு முதலாளி தாசரே நம் புர்ச்சியாளர் மணிரத்னம். அதற்கு எள்ளளவும் குறைவில்லாமல் ஒத்துழைப்பு தந்துள்ளார் அவர் மனைவி சுகாசினி.
வர்னாஸ்ரம கால இராமாயண இராமன் தமிழினத்தை அழித்து பூர்வகுடிகளை அழித்து தமிழன் இராவணனை கொன்று வளங்களை சூறையாடினான். அந்த ராமனிடம் கூட மனைவியை சந்தேகப்பட்ட குறையிருக்கும். ஆனால் மணிரத்னமோ ஒரு படி மேலே போய் தேவ் பிரகாஷ் மனைவியை சந்தேகப்பட்டதே எதிரியான பழங்குடி வீராவை அழிக்க தான் என புது விளக்கம் தந்து தங்கள் பார்ப்பனியத்தின் மீதான களங்கத்தை போக்கியுள்ளார். புதிய சனநாயக நம்பிக்கையாளர்களான நாம் ஒடுக்கப்பட்ட, பழங்குடி, உழைக்கும் மக்களை குறி வைத்து இராவணன் பெயரில் வந்துள்ள நவீன இராமனை “கார்ப்பரேட் ராமனை” அழிக்க தவறினால் ‘சமத்துவம்’ நோக்கிய நமது பயணம் முழுமையடையாது.
புர்ச்சியாளர் மணிரத்னம் மேட்டுக்குடி ரசிக சிகாமணிகளுக்கு இரண்டே கேள்விகள்.
1. அறிவு ஜீவி என பீற்றிக் கொள்ளும் மணிரத்னம் தென்மாவட்டத்தில் நடைபெறும் கதையில் வாகனங்கள் மட்டும் எப்படி கூசூ27 என தாங்கி வரும் சேலம் வாகனமானது?
2. கண்ணை கட்டியே கூட்டி போகும் ஐஸ்வர்யாராய் இறுதி காட்சியில் எப்படி சரியாக விக்ரமை தேடி போகிறார்?

குழப்பம் தீர்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.

ஆக்கம் ,

தமிழ்செல்வன்
சேலம்
98435-55110